வெள்ளி, 13 செப்டம்பர், 2019

BBC :கனிமொழி இலங்கை வருகை .. தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேச்சு

கனிமொழி இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் மீதான கடற்படை
தாக்குதல் குறித்த கேள்வியும், அமைச்சகத்தின் பதிலும் !
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவிக்கின்றார்.
 இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.
கொழும்பிலுள்ள விவசாய அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை சார்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் , இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தனர். இலங்கை கடற்படை இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ள போதிலும், சில சந்தர்ப்பங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்" எனவும் கூறியிருந்தார்.

கனிமொழியினால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை இலங்கை அதிகாரிகள் மறுத்திருந்ததுடன், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனவும் உறுதியளித்தனர்.
இந்திய மீனவர்களோ அல்லது இலங்கை மீனவர்களோ திட்டமிட்டு கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என இரண்டு தரப்பினரும் கூறியிருந்தனர்.
இந்த சந்திப்பு நிறைவு பெற்றதன் பின்னர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
எனினும், இலங்கை சார்பில் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார். இரண்டு நாட்டு அதிகாரிகளும் ஒன்றிணைந்து, கலந்துரையாடல்களை நடத்தி, எதிர்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை செய்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டார்.
மீனவப் பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள தமிழக அரசாங்கத்துடன் முன்னர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், மாநில ரீதியில் அதனைச் செய்வதில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையில் உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இரண்டு நாட்டு மீனவர்களும் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவத்திற்குத் தீர்வாக, பொறிமுறையொன்று அத்தியாவசியம் என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படவுள்ள மாநாட்டில் அதற்கான தீர்வு எட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்

கருத்துகள் இல்லை: