திங்கள், 29 ஏப்ரல், 2019

குழந்தைகள் விற்பனை: கைதானோர் எண்ணிக்கை 8

குழந்தைகள் விற்பனை:  கைதானோர் எண்ணிக்கை 8மின்னம்பலம் : ராசிபுரம் செவிலியர் உதவியாளர் அமுதவல்லி தலைமையில் பச்சிளம் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மோசடிக் கும்பலைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண் தரகர்கள் நேற்று (ஏப்ரல் 28) கைதாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரிலுள்ள காட்டூர், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அமுதவல்லி என்பவர் ஏழைக் குழந்தைகளை அவற்றின் பெற்றோரிடமிருந்து சட்ட விரோதமாக விலைக்கு வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக 25.04.2019-ம் தேதி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 05/2019 , பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2015 உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக ராசிபுரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயராகவன் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இதுவரை அமுதவல்லி அவரது கணவர் ரவிச்சந்திரன, கொல்லிமலை செங்கரை அருகில் உள்ள பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜீப் டிரைவராக பணிபுரியும் முருகேசன் மற்றும் புரோக்கராக செயல்பட்டு குழந்தைகளை விற்பனை செய்த ஈரோட்டைச் சேர்ந்த துணை புரோக்கர்கள் பர்வீன், அருள்சாமி, ஹசீனா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், இவ்வழக்கில் குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து விலைக்கு வாங்க அழுதவல்லிக்கு துணை புரோக்கர்களாக செயல்பட்ட 1) செல்வி (வயது-29), க-பெ குமார், பவானி, ஈரோடு மாவட்டம். 2) லீலா (வயது-36) க-பெ கார்த்திகேயன், ஈரோடு ஆகியோர் விசாரணைக்குப் பின் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் இதுவரை 14 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது, கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குழந்தை விற்பனை செய்த மற்றும் வாங்கிய பெற்றோர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மற்ற இடைத்தரகர்களைக் கண்டறிந்து அவர்கள் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: