வெள்ளி, 3 மே, 2019

மழை யாகம்.. அவாள் துறையாகிறது அறநிலைய துறை .. ஆசிரியர் வீரமணி கடும் கண்டனம்

மழை வேண்டி யாகம்: கி.வீரமணி கண்டனம்!மின்னம்பலம் : மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று (மே 2) கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்குத் தென்மேற்குப் பருவ மழை தமிழகத்துக்கு நீரை அளிக்கவில்லை. இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே கஷ்டப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது. பல கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதாகவும், இதனால் குடிநீர் தேவைக்காக பல கிமீ தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை உருவாகியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கடும் வறட்சியைத் தொடர்ந்து தமிழகத்துக்கு மழை வேண்டி இந்து சமய அறநிலையத் துறை கீழ் செயல்பட்டு வரும் முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல், மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல் உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டிருந்தது.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “மழை பெய்வது எப்படி, மழை பொய்ப்பது எதனால் என்பதெல்லாம் மூன்றாம் வகுப்பு மாணவியைக் கேட்டாலே படபடவென சொல்லுவார். ஐஏஎஸ் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்றால் அவர்கள் படித்த படிப்பைவிட அவர்களின் மூளையில் குடிகொண்டுள்ள மூடத்தனத்தின் குப்பைதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும். யாகத்தாலும், பூஜைகளாலும் காரியம் ஆகும் என்றால், ஆட்சியே தேவையில்லையே அலுவலகங்களையெல்லாம் கோயில்களாக்கி, அலுவலர்களைப் பூசாரிகளாக்கிவிடலாமே. யாகம், பூஜை புனஸ்காரங்களை நடத்துவது அறநிலையத் துறையின் வேலையல்ல” என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறநிலையத் துறை என்பது வரவு, செலவுகளைப் பார்க்க வேண்டிய துறையே. நிர்வாகம் சம்பந்தப்பட்டது. யாகம், பூஜை புனஸ்காரங்களை நடத்துவது அதன் வேலையல்ல. இந்து அறநிலையத் துறை ஆணையரின் ஆணை மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு 51-A(h) எதிரானது. சட்டத்தை மீறும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.
“அண்ணா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நிலையில், அரசு அலுவலகங்களில், வளாகங்களில் எந்த மதவழிப்பாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கை - ஆணை பிறப்பித்தது கூட அண்ணா பெயரில் உள்ள ஆட்சிக்குத் தெரியாதது வெட்கக்கேடு. அச்சட்டம் எப்படி? ஏன் வந்தது? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கி.வீரமணி.

கருத்துகள் இல்லை: