திங்கள், 29 ஏப்ரல், 2019

தடுப்பூசி போட வந்த 20 குழந்தைகளை காணவில்லை .. கொல்லிமலையில் அதிர்ச்சி

vikatan.com - -ragupathi-r :
குழந்தைகளை விற்றதாக நர்ஸ் அமுதாவுடன் கூட்டாளி கைது
குழந்தை கடத்தலில் கைது செய்யப்பட்டவர்கள்ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், 9-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் கொல்லிமலை முக்கிய இடம்பெற்றுள்ளது. அதாவது இங்கிருந்துதான் பெரும்பாலான குழந்தைகள் வாங்கி விற்பனை செய்யப்பட்டுள்ளனர். கைதான கொல்லிமலை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதவள்ளியிடம் 6 குழந்தைகளை விற்பனை செய்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
கொல்லிமலையில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் தேவி தலைமையில், பயிற்சியில் உள்ள 15 நர்ஸ்கள் மருத்துவமனையில் உள்ள பிறப்பு பதிவேடுகளை சரிபார்த்தல், தத்துக் கொடுத்த குழந்தைகளின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொல்லிமலையில் முதன்முதலாக 1999-ல் தொடங்கப்பட்ட பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்புச் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் சிறப்புக் குழுவினர் நேற்று ஈடுபட்டனர். மேலும், இந்தக் குழுவானது வீடு, வீடாகவும் சென்று சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட உள்ளது.

கொல்லிமலையில் முகாமிட்டுள்ள இந்தக் குழுவினர் இன்னும் ஒரு வார காலத்துக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதன் பிறகே கொல்லிமலை பகுதியில் இருந்து எத்தனை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவரும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தடுப்பூசி போடும் பணியின்போது 20 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள் முறையாக தத்துக் கொடுக்கப்பட்டுள்ளார்களா, இல்லை எனில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளார்களா அல்லது கொல்லிமலையில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுவிட்டு தற்போது இடம் பெயர்ந்துவிட்டார்களா? எனவும் சிறப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ராசிபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட 14 குழந்தைகளில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பெண்களை வைத்தே நடந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் பல பூதாகரமான தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்

கருத்துகள் இல்லை: