வெள்ளி, 1 ஜூன், 2018

ரஜினியும் அவரது தப்பு தாளங்களும் ... .... ஒரு Flashback


நிசப்தம்.காம்  : பாலச்சந்தரின் படப்பிடிப்பு. நாயகி குளித்தபடியே நாயகனிடம் வசனம் பேச
வேண்டிய காட்சிக்காக யூனிட்டில் தயாராக இருக்கிறார்கள். நாயகனும் மேக்கப்புடன் ரெடியாக இருக்கிறார். பாவாடையை மார்புவரைக்கும் கட்டிக் கொண்டு ஸ்பாட்டுக்கு வருகிறார் அந்த கறுப்பு நடிகை. வந்தவருக்கு அதிர்ச்சி. அண்டாவில் வெந்நீர் இல்லை. வெந்நீர் இல்லாமல் நடிக்க முடியாது என்று சத்தம் போடுகிறார். அதன்பிறகு அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அவசர அவசரமாக அண்டா நிறைய தண்ணீரை ஊற்றி காய வைக்கிறார்கள். காத்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் டென்ஷனாகிவிடுகிறார். பொறுமையிழந்தவர் வெந்நீர் தயாராகும் இடத்திற்கு போகிறார். போனவர் அசிஸ்டண்ட் டைரக்டரை நகரச் சொல்லிவிட்டு அண்டாவுக்குள் அசால்ட்டாக ‘ஒண்ணுக்கடித்து’விட்டு வந்து தன் இடத்தில் அமர்ந்து கொள்கிறார். பிறகு ஹூட்டிங்கின் போது அதே தண்ணீரில்தான் அந்தப் பெண்மணி குளித்தாராம். 
பதிவில் இருந்த குறிப்புகள், கமெண்ட்களை வைத்துப் பார்த்தால் இது ‘தப்புத்தாளங்கள்’ படத்தில் ரஜினிகாந்த், சரிதா சம்பந்தப்பட்ட காட்சியின் போது நடந்திருக்கிறது. சூப்பர் ஸ்டாரோ, பவர் ஸ்டாரோ- ஒவ்வொரு ஆளுக்கும் ஏதாவதொரு விதத்தில் கோர முகம் இருக்கிறது பாருங்கள்.
சென்ற முறை ஊருக்கு போயிருந்த போது சத்தி மாமாவை பார்க்க வேண்டியிருந்தது. அவருக்கு இந்த மாதிரி கிசுகிசு விவகாரங்களில் ஆர்வம் அதிகம். பேசப் பேசவே மூக்கு வியர்த்துக் கொள்ளும். அவரை உற்சாகப்படுத்துவதற்காக இந்த வெந்நீர் விவகாரத்தை சொன்ன போது ‘ங்கொக்கமக்கா’ என்று வாய் பிளந்து கொண்டிருந்தார். சொன்னது தப்பாக போய்விட்டது. அதன் பிறகு வேறு விஷயங்களைப் பேசினாலும் அவரால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை. திரும்பத் திரும்ப அந்த விவகாரத்திற்கே இழுத்தார். இனி எதைப் பேசினாலும் அவர் காதில் ஏறாது என்பதால் கிளம்பத் தயாராகியிருந்தேன். வழியனுப்பி வைக்க வாசல் வரைக்கும் வந்தவர் சும்மா இருந்திருக்கலாம் ‘அப்பவே நினைச்சேன், இந்த அக்கிரமம் எல்லாம் பண்ணினா கிட்னி ஃபெயிலியராகாம வெங்காயமா ஆகும்?’என்றார். 
என்ன நேரத்தில் வாய் வைத்தாரோ இப்பொழுது மழை பெய்தால் எனக்கு சாமிகளின் ஒண்ணுக்கோடு சேர்த்து ஸ்டாரின் ஒண்ணுக்கும் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

ரஜினி, மழை, ஒரு கிசுகிசு : “சாமிகள் எல்லாம் சேர்ந்து மேலிருந்து ஒண்ணுக்கடிக்கிறாங்க. அதுதான் மழையா வருது”- இங்கு சாமிகள் என்றால் சுப்பிரமணியசாமியோ, சந்திராசாமியோ இல்லை. ஈஸ்வரன், முருகன், ஏசு, அல்லா எல்லாம். சாமிகள் மட்டுமில்லாது செத்து சாமியாகிப்போன தாத்தன், பூட்டன்களும் சேர்ந்து அடிக்கிறார்களாம். இப்படித்தான் ‘மழை என்பது சாமிகளின் ஒண்ணுக்கு’ என பல வருடங்களுக்கு நம்பிக் கொண்டிருந்தேன். இது சுயமாக யோசித்தது இல்லை. எங்கள் ஆயாவின் தில்லாலங்கடி வேலை. அவர்தான் அந்தக் காலத்தில் இப்படியொரு கதையைச் சொல்லி நம்ப வைத்துவிட்டார். இப்பொழுது அவரும் அதே வேலையாகத்தான் மேலே போயிருக்கிறார்.
இரண்டு நாட்களாக பெங்களூரில் மழை பின்னியெடுக்கிறது. நேற்று அலுவலகத்திலிருந்து வீடு வரைக்கும் சொட்டச் சொட்ட நனைத்து கொண்டே செல்ல வேண்டியிருந்தது. ட்ராஃபிக் மட்டும் இல்லாமலிருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் நனையலாம். அது இருக்கட்டும்.
நீங்கள் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தை நம்புகிறீர்களா?  சென்ற ஆண்டிலிருந்து நான் நம்புவதில்லை. ‘ஜூன் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்குகிறது’, ‘நேற்று இலங்கைக்கு மழை வந்துவிட்டது எனவே இன்று கேரளாவுக்கு வந்துவிடும்’ என்று படம் படமாக ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மழை வந்த பாட்டைத்தான் காணவில்லை.  சாமிகள் அளவுக்கு ஒண்ணுக்கடிக்காவிட்டாலும் பரவாயில்லை- குறைந்தபட்சம் ஒன்றரை வயது பையன் அளவுக்காவது அடித்திருக்க வேண்டாமா? ம்ஹூம். காய்ந்து கருவாடு ஆகிப் போனதுதான் மிச்சம்.
தோட்டங்காட்டுக்காரனுக்கு

‘வாழைக்கு தண்ணீர் போதாதே’ என்றும், ‘கடலை காய்கிறதே’ என்றும் கவலை என்றால் எனக்கு என்னளவில் பிரச்சினை. பெங்களூரில் வீடு கட்டுவதற்கு முன்பாக ஐந்நூறு அடிக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டியிருந்தோம். ஐந்நூறு அடி ஆழம் போவதற்குள்ளேயே தண்ணீர் கிடைத்துவிட்டது. எண்பதாவது அடி, நூற்றி நாற்பதாவது அடி, இருநூற்றி அறுபதாவது அடி, நானூற்றி எண்பதாவது அடி என சகட்டு மேனிக்கு ஊற்றுக்கள் கிடைத்தன. மோட்டாரை முந்நூறூவது அடியில் பொருத்திவிட்டு இனி வாழ்நாள் முழுவதும் தண்ணீருக்கு பிரச்சினையில்லை என்று நினைத்த ஆறாவது மாதத்தில் கோட்டை சிதறத் துவங்கியது.

மொத்த ஊரும் மழையில்லாமல் காயத் துவங்கியதால் சுற்றிச் சுற்றி ‘போர்’ போட்டார்கள். பூமாதேவியின் உடலில் செம குத்து. அவளுக்கு எத்தனை பேர்தான் ரத்தத்தை உறிஞ்ச விடுவாள்? எங்கள் வீட்டில் மோட்டர் சுவிட்சை போட்டால் வெறும் காற்றுதான் வந்தது. மோட்டார் கடையிலிருந்து வந்தவர்கள் குழிக்குள் கயிறை விட்டுப்பார்த்து மூன்று ஊற்றுக்கள் காலியாகிவிட்டதாகவும், கடைசி ஊற்று மட்டும் இருப்பதாகச் சொல்லி மோட்டரை ஐந்நூறு அடிக்கு இறக்கினார்கள். 
ஐந்நூறாவது அடியில் ஓடிக் கொண்டிருக்கும் ‘போர்’ நின்று போனால் இனி டேங்கர் தண்ணீர்தான் வாங்க வேண்டும் என நினைத்திருந்தோம். இங்கு யார் வேண்டுமானாலும் தண்ணீரை விற்க முடியாது. அது ஒரு மாஃபியா. அரசியல் செல்வாக்கு பின்புலமுள்ள ஒரு சிலரால் மட்டுமே விற்கப்படும் வஸ்து. பஸ் ஸ்டேண்ட் கடைகளில் எம்.ஆர்.பி ரேட் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் எப்படி பாட்டில் தண்ணீரை விற்கிறார்களோ அப்படித்தான் டேங்கர் தண்ணீரின் விலையும். ஏரியாவுக்கு ஏற்ப, சீஸனுக்கு தக்கவாறு நிர்ணயித்துவிடுவார்கள். 
நிலைமை இப்படியிருக்க இந்த வருடமும் மே மாதம் வெயில் காட்டுவென காட்டியதல்லவா? இந்த சித்திரையிலும், வைகாசியிலும் அக்கம்பக்கத்தில் ‘போர்’ போட்டவர்கள் சர்வசாதாரணமாக ஆயிரம் அடிக்குத் தோண்டினார்கள். தண்ணீர் வந்ததா என்று கேட்டால் ஒரு பெப்ஸி பாட்டில் நிரம்பும் அளவுக்கு வந்தது என்று சோக ஃபீலிங்க்ஸ் காட்டினார்கள். இந்த வருடம் மழை தவறியிருந்தால் கதை கந்தலாகியிருக்கும். ஆனால் தப்பித்துவிடுவோம் போலிருக்கிறது. ‘எப்படிச் சொல்லுகிறாய்?’ என்று கேட்டுவிடாதீர்கள். குத்துமதிப்பான குருட்டு நம்பிக்கைதான். 
இப்பொழுது ஆயா இருந்திருந்தால் ‘நமக்கெல்லாம் ஒரு நாளைக்கு இத்தனை தடவை ஒண்ணுக்கு வருது, சாமிகளுக்கு மட்டும் ஏன் வருஷம் ஆனாலும் வர மாட்டேங்குது?’ என்று கேட்டிருக்கலாம். எங்கள் ஆயா அதிலெல்லாம் செம விவரம்.  “சாமிகளுக்கு என்னமோ கிட்னியில் ப்ராப்ளமமா” என்று தப்பித்திருப்பார் என நினைக்கிறேன். இந்த ‘கிட்னி ப்ராப்ளம்’ விவகாரம் இன்னொரு விவகாரத்தை ஞாபகப்படுத்துகிறது.
அடிக்கடி வலைப்பதிவை நீங்கள் வாசித்திருக்கக் கூடும். இல்லையென்றால் ஒரு எட்டு போய் வாருங்கள். இப்பொழுது அந்தத் தளத்தில் அவர் எழுதுவதில்லை. ஆனால் எழுதிய வரைக்கும் கலக்கலாக இருக்கும். வெறும் சினிமா சங்கதிகள்தான். ஆனால் அசத்தலான எழுத்து நடை. நிறைய கிசுகிசு மேட்டர்களும் உண்டு. அப்படியான ஒரு கிசுகிசுதான் இது.  http://www.nisaptham.com/2013/06/blog-post.html

கருத்துகள் இல்லை: