வியாழன், 31 மே, 2018

15 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி

15 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி தினத்தந்தி :  15 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி உறுதிபட தெரிவித்து உள்ளார். பெங்களூரு, கர்நாடாகவில் கடும் இழுபறிக்கு பிறகு, மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. அங்கு முதல் மந்திரியாக ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாரசாமி இருந்து வருகிறார். குமாரசாமி முதல் மந்திரியாக பதவி ஏற்றதும், 24 நேரத்துக்குள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று பாஜக கெடு விதித்து இருந்தது.ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்தபின்பு, அமைச்சரவை விரிவாக்கத்துக்குப்பின் முடிவு எடுக்கப்படும் எனக் குமாரசாமி தெரிவித்துவிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜக, சில நாட்களுக்கு முன்  முழு அடைப்பு  போராட்டத்துக்கு அழைப்புவிடுத்து இருந்தது. 
இந்நிலையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வது குறித்து பெங்களூரில் குமாரசாமி நிருபர்களுக்கு இன்றுபேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

விவசாயிகளின் பயிர்கடனை உறுதியாக இந்த அரசு தள்ளுபடி செய்யும். அதற்கு 15-நாட்கள்வரை பொறுமை காக்க வேண்டும். பயிர்கடன் தள்ளுபடி குறித்து அடுத்த 15 நாட்களில் நல்ல முடிவு எடுப்போம், முழுமையான அறிவிப்பை வெளியிடுவோம். எந்தவிதமான சிக்கல் இருந்தாலும், நிதிக்கட்டுப்பாட்டை பராமரிப்பதிலும், விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வதிலும் எங்கள் அரசு தீர்மானமாக இருக்கிறது.

விவசாயிகளுடன் கடந்த 3 மணிநேரம் ஆலோசனை நடத்தியபின்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். விரைவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நானும், துணை முதல்வர் பரமேஸ்வராவும் சந்தித்து விவசாயக் கடன்தள்ளுபடி குறித்து ஆலோசிக்க இருக்கிறோம். ஒட்டுமொத்தமாகக் கடன் தள்ளுபடி செய்யப்படும் தொகை எனக்குக் கிடைத்திருக்கிறது. எத்தனை ஆயிரம் கோடிகளாக இருந்தாலும், விவசாயிகளைக் காப்பது எங்களின் கடமையாகும். இன்னும் 15 நாட்களில் பயிர்கடன்தள்ளுபடி உறுதியாக இருக்கும். இதிலிருந்து நான் பின்வாங்கமாட்டேன்” இவ்வாறு தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை: