புதன், 30 மே, 2018

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்!

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்!மின்னம்பலம்: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்ய ஜூன் 5ஆம் தேதி வரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக, கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனமாகக் கருதப்படும் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்து, பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இல்லங்களில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி. சைனி, ஜூலை 10ஆம் தேதி வரை கார்த்தியை கைது செய்ய தடை விதித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் இன்று (மே 30) மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஜூன் 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த நீதிமன்றம், அதுவரை சிதம்பரத்தைக் கைது செய்ய தடை விதித்துள்ளது. ஜூன் 5ஆம் தேதி அமலாக்கத் துறை முன் ஆஜராகவும் சிதம்பரத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: