திங்கள், 28 மே, 2018

உப்பு நீக்கும் ஆலையால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விடும் ஆபத்து ...

உப்பு நீக்கும் ஆலையால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து?மின்னம்பலம் :நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட கடல் நீரைத் தூய்மைப்படுத்தும் ஆலை அமைக்கும் திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மே 8ஆம் தேதியன்று நடைபெற்ற 190வது கூட்டத் தொடரில் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் குழாய் வாரியம்(CMWSSB) ரூ 3,912.16 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை தூய்மைப்படுத்தும் ஆலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்புதலைக் கோரியிருந்தது. இதனையடுத்து சுற்றுச்சூழல், வனவியல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (EAC) நிபுணர் மதிப்பீட்டுக் குழு (CRZ) களஆய்வு செய்து ஆய்வறிக்கையைத் தயார் செய்தனர். இதனடிப்படையில் தற்போது இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெமிலி அருகே பேரூர் என்னுமிடத்தில் துவங்கப்படவுள்ள இந்தத் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 40 கோடி லிட்டர் கடல் நீர் சுத்திகரிக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் பல்லுயிர் உயிரினங்களாகக் கருதப்படும் தாவரவாழ் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என கடல் உயிரியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் நீரைத் தூய்மையாக்கும் இந்தத் திட்டத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை சுத்தமாக மாற்ற 3 லிட்டர் அசுத்த நீர் வெளியேறும். அந்த வெளியேறிய நீரில் அதிகபட்ச ரசாயனக் கழிவுகள் இருக்கும். அந்த நீரானது மீண்டும் கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது.
40 கோடி லிட்டர் கடல் நீர் தூய்மையாக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தென்னிந்தியா மிகப் பெரும் சுற்றுச்சூழல் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான நீர் நிலை குறித்த ஆய்வமைப்பின் தலைவர் எஸ்.ஜனகராஜன் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: