ஞாயிறு, 27 மே, 2018

கொலைப் பட்டியல் தயாரித்த இன்ஸ்பெக்டர்!

டிஜிட்டல் திண்ணை: கொலைப் பட்டியல் தயாரித்த இன்ஸ்பெக்டர்!இந்த இன்ஸ்பெக்டர் தான் இந்த படுகொலை களுக்கு எல்லாம் காரணமா? பத்தாண்டுகளாக அங்கு பணிபுரிகிறாரா? அப்ப சரி ஸ்டெர்லைட் சம்பளம் அதிகம் வாங்கியிருப்பான். அதறகு நன்றி கடன் தான் செய்திருக்கிறான். இவன் மனைவியும் இன்ஸ்பெக்டரா இதே ஊரிலே? இது போதும் இவங்க தூத்துக்குடி யில் கால்வாசி வாங்குற அளவு சம்பாதிச்சு இருப்பாங்க. இவன் மீது சிபிஐ விசாரணை யே நடத்தலாம்
minnambalam : மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப் வந்து விழுந்தது.
“தூத்துக்குடியில்தான் இரு நாட்கள் இருந்தேன். அங்கே தமிழக அரசின் உத்தரவு காரணமாக இணைய வசதி இல்லை. எனவே மதுரையிலிருந்து இப்போது தொடர்புகொள்கிறேன்’’ என்று முன்னுரை கொடுத்துவிட்டு மெசேஜை டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“தூத்துக்குடியில் இன்னும் இயல்பு நிலை முழுதாகத் திரும்பவில்லை. கடைகள் திறப்பதும், பேருந்துகள் ஓடுவதும்தான் இயல்பு வாழ்க்கை என்றால் அது கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்புகிறது. ஆனால் மக்கள் மனதிலிருந்து அச்சமும் கோபமும் இன்னும் முழுதாக அகலவில்லை. தூத்துக்குடியில் போய் இறங்கித் துப்பாக்கிச் சூடு பற்றிதான் முழு விசாரணை நடத்தினேன். அதில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

துப்பாக்கிச் சூடு நடந்த கலெக்டர் அலுவலகம், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலை இரண்டுமே தூத்துக்குடி சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் வருகிறது. காவல் நிலையத்திலிருந்து விசாரணையைத் தொடங்கினோம். இங்கே இன்ஸ்பெக்ட்ராக இருக்கும் ஹரிஹரன் பத்து வருடங்களாக இதே பணியில் இருக்கிறார். காவல் துறையின் எல்லா விதிகளையும் மீறி இங்கே பத்து வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். சிலசமயம் டிரான்ஸ்பர் போடுவது போல் போடுவார்கள். ஆனால் இரு நாட்களில் மீண்டும் இங்கேயே டூட்டியில் சேர்ந்துவிடுவார் ஹரிஹரன். அவ்வளவு செல்வாக்கோடு இருக்கிறார். இந்த செல்வாக்குக்குக் காரணம் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்கும் ஸ்டெர்லைட்டுக்கும் இருக்கும் பரஸ்பர அண்டர்ஸ்டேண்டிங்தான் என்று சொல்லுகிறார்கள்.
‘ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருக்கும் போராட்டக்கார்கள், ஒருங்கிணைப்பாளர்கள் யார் யார் என்பது லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அத்துப்படியான விஷயம். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் கடந்த சில மாதங்களில் தீவிரம் அடைந்ததிலிருந்து யார் யார் அதைக் கையிலெடுத்தார்கள், யார் யார் ஒருங்கிணைத்தார்கள் என்ற பட்டியல் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்குக் கிடைக்க அந்த பட்டியலை அவர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்குக் கொடுத்திருக்கிறார். இந்தப் பட்டியலை வைத்துக்கொண்டுதான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இன்ஸ்பெக்டர் கொடுத்த லிஸ்டில் இருந்தவர்கள்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்று மனித உரிமை அமைப்புகள் இப்போது கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் ஓய்வு பெற்ற ஐஜியான அலெக்சாண்டர் துப்பாக்கிச் சூடுக்கு மூன்று நாட்கள் முன்பே தூத்துக்குடியில்தான் இருந்ததாகவும், அவருக்கும் இந்த துப்பாக்கிச் சூடுக்கும் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் கண்காணிப்பகம், எவிடென்ஸ் ஆகிய மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றன. இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
ஹரிஹரன் தீவிரமான போராட்டக்காரர்களைப் பட்டியல் போட்டுக் கொடுக்க அதன் பின் அலெக்சாண்டரோடு ஆலோசனை நடத்தப்பட்டதாம். ‘கொஞ்ச பேரை சுட்டுக் கொன்னாதான் அடுத்து யாரும் போராட மாட்டான்’ என்று அலெக்சாண்டர் ஆலோசனை சொல்ல அதன் பேரிலேயே லோக்கல் போலீஸைத் தவிர்த்து வெளியூர் பட்டாலியனிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து ஆபரேஷனை முடித்திருக்கிறார்கள் என்பதே மனித உரிமை அமைப்புகளின் அழுத்தமான வாதம்.
இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர்களின் வீடுகளுக்குக் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார் தூத்துக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் வனிதா. இவர் வேறு யாருமல்ல; இன்ஸ்பெக்டர் ஹரிஹரனின் மனைவிதான். இவர் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களிடம், ‘போராட்டத்தைப் பார்க்கச் சென்றபோது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்து என் உறவினர் இறந்துவிட்டார். இதில் ஏதும் சதியில்லை’ என்று எழுதிக் கையெழுத்துப் போடச் சொல்லி வற்புறுத்துகிறார் இன்ஸ்பெக்டர் வனிதா. கொல்லப்பட்ட மேலும் சிலரின் வீடுகளுக்கு சென்று வெற்றுக் காகிதத்திலும் கையெழுத்து கேட்கிறாராம். ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மறுப்பு தெரிவிப்பதால் அவர்களைப் பல வகையிலும் சமாதானம் செய்துவருகிறார் இன்ஸ்பெக்டர் வனிதா.
இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், இன்ஸ்பெக்டர் வனிதா இருவருமே தமிழக அரசுக்கு வேலைபார்க்கிறார்களா அல்லது ஸ்டெர்லைட்டுக்கு வேலை பார்க்கிறார்களா என்பதுதான் மனித உரிமை அமைப்புகளின் கேள்வி. விரைவில் இந்த இன்ஸ்பெக்டர் தம்பதி பற்றிய முழு விவரங்களையும் மனித உரிமை அமைப்புகள் பிரஸ் மீட் வைத்து வெளியிடப் போகிறார்கள்’’ என்று தனது மெசேஜை செண்ட் பண்ணியது வாட்ஸ் அப்.
ஃபேஸ்புக் அதிர்ச்சியோடு இதைப் பார்க்க, மீண்டும் ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டது வாட்ஸ் அப்.
“தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் மதுரை, ஈரோடு என்று வெளி மாவட்ட போலீஸார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை. வெளியூர் போலீசார் மைதானங்களில் தூங்கி, தெருக்களிலேயே குளித்து டூட்டிக்கு ரெடியாகிறார்கள். பெண் போலீசாரின் நிலைமைதான் ரொம்பப் பாவம். பல பெண் போலீஸார் இயற்கை உபாதைகளுக்குக்கூடப் போக முடியாமல் சிறுநீர் தொற்று ஏற்பட்டுத் தவிக்கிறார்களாம். ‘ஏதோ ஒரு பட்டாலியனை வச்சி துப்பாக்கிச் சூடு நடத்தி முடிச்சிட்டு இப்ப பாதுகாப்புக்குனு சொல்லி எங்களை தூத்துக்குடியில இறக்கி விட்டுட்டாங்க. ரொம்ப கஷ்டப்படுறோம். அதைவிட தூத்துக்குடி மக்கள் வேற எங்களை ரொம்ப கோவமா, ஏதோ நாங்கதான் சுட்ட மாதிரி பாக்குறாங்க. எப்போதான் தூத்துக்குடியிலேர்ந்து வெளியே போகப் போகிறோமோ?’ என்று புலம்புகிறார்கள் வெளியூர் போலீசார்’’ என்று முடித்து ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: