சனி, 26 மே, 2018

சுட உத்தரவிட்டது ராஜ்நாத் சிங்? மத்திய அரசின் வாய்மொழியான உத்தரவு’

 டிஜிட்டல் திண்ணை: சுட உத்தரவிட்டது ராஜ்நாத் சிங்?
மின்னம்பலம்  : “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது தூத்துக்குடி விவகாரம். நேற்று பத்திரிகையாளர்களிடம் முதல்வர் விளக்கம் கொடுத்தாலுமேகூட, அதற்கும் பல விமர்சனங்கள் வந்திருக்கின்றன. அதுவும் குறிப்பாக 10க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இன்னமும் உரியவர்கள் விடையளிக்கவில்லை.
தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு என்பது தமிழகத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடுகளை எல்லாம்விட வேறுபட்டது. அதாவது மக்கள் போராட்டங்களைக் கலைக்க நடத்தப்படும் துப்பாக்கிச் சூடாக இல்லாமல், செலக்ட் செய்து எலிமினேட் செய்யும் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைக் கொலை செய்யும் ராணுவ உத்தியாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு அமைந்திருக்கிறது. அதனால்தான் இதற்கு யார் உத்தரவிட்டார் என்ற கேள்வி அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.
நேற்று தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துப்பாக்கிச் சூட்டுக்குத் தான் உத்தரவளிக்கவில்லை என்று இலைமறைகாயாகத் தெளிவுபடுத்திவிட்டார். தமிழகத்தின் போலீஸ் துறையை நிர்வகிக்கும் முதலமைச்சருக்கே தெரியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தித் தமிழக மக்களைக் கொல்ல உத்தரவிட்டது யார் என்று தலைமைச் செயலகத்தில் விசாரித்தபோதுதான், அந்த அதிர்ச்சிகரமான பதில் தெரியவருகிறது.

முதல்வர் அலுவலகத்தில் இப்போது மிகவும் பதற்றமாக இருக்கிறார்கள். தேவையில்லாமல் முதல்வர் மீது பழி போடப்படுகிறது என்று அவர்கள் புலம்புகிறார்கள். அன்று காலை 11 மணியளவில் நிலைமை பதற்றமானதை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் காவல் துறை மேலிடத்தை அணுக, காவல் துறை மேலிடமோ தலைமைச் செயலாளரை அணுகியிருக்கிறது. அதன் பின் தலைமைச் செயலாளர் டெல்லியைத் தொடர்புகொண்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியதாகவும் அதன் பின்னர் உள்துறை அமைச்சக உத்தரவின் பேரிலேயே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்பட்டதாகவும் முதல்வர் அலுவலகத்திலுள்ளவர்கள் வருத்தத்தோடு பேசிவருகிறார்கள். ராஜ்நாத் சிங் உத்தரவின் பேரில்தான் துப்பாக்கிச் சூடு நடந்ததென்றும் ஆனால், அதற்குத் தமிழக முதல்வர் பலிகடா ஆக்கப்படுகிறார் என்பதும் அவர்களது வருத்தம்.
தமிழகக் காவல் துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் வழியாக உத்தரவு வருவது ஒன்றும் புதிதல்ல என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். தமிழகத்தில் உள்ள மசூதிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த நிலையில் கடந்த வருடம் ஒவ்வொரு மசூதிக்கும் முஸ்லிம் விவகாரங்களைக் கையாளும் அந்தந்த லோக்கல் உளவுத் துறை அதிகாரிகள் சென்றிருக்கிறார்கள். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை மாற்றிவிடுமாறும், இது அரசு உத்தரவு என்றும் சொல்லியிருக்கிறார்கள். மசூதிகளில் இருந்து இது தொடர்பாக ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த தலைவர் உடனடியாக டிஜிபி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, ‘மாநில அரசு இதுபோல ஏதும் உத்தரவு போட்டிருக்கிறதா?’ என்று கேட்டுள்ளார். அப்போது அந்தத் தலைவரிடம் ஆஃப் த ரெக்கார்டாக டிஜிபி அலுவலகத்தில் சொன்ன தகவல், ‘இது மாநில அரசு உத்தரவில்லை. மத்திய அரசின் வாய்மொழியான உத்தரவு’ என்று நட்பு ரீதியில் சொல்லியிருக்கிறார்கள்.
ஆக தமிழக அரசு நிர்வாகத்தைத் தள்ளிவைத்துவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம், காவல் துறை அதிகாரிகள் என்றுதான் டெல்லியின் உத்தரவுகள் செல்கின்றன. முதல்வர், அமைச்சர் என்ற பதவிகளுக்கெல்லாம் டெல்லி மதிப்பளிப்பதே இல்லை. அதிகாரிகள் மூலமாகதான் அன்றைக்கும் உத்தரவிட்டப்பட்டது. இன்றைக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கும் அதிகாரிகள் வழியாகவே உத்தரவிடப் பட்டிருக்கிறது என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்’’ என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
இந்தத் தகவலுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை பதில் சிம்பளாக போட்ட ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டஸை பதிவேற்றியது.
“மிகவும் கவலையில் இருக்கும் எடப்பாடியை நேற்று இரவு அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் வருத்தத்துடன் பேசியிருக்கிறார் எடப்பாடி. 'ஊருக்குள் என்ன பிரச்சினை வந்தாலும் இப்போ என்னைத் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. மறுபடியும் சசிகலா குடும்பமே வரணும்னு நினைக்கிறாங்களா தெரியல. எந்த இடத்திலாவது யாருகிட்டயாவது நான் முதல்வர் என்று திமிராக நடந்துகிட்டேனா? கவுன்சிலரை பார்க்கிற மாதிரி யாரு வேணும்னாலும் நினைச்ச நேரத்துல பார்த்துட்டுதானே இருக்காங்க. போன வாரத்துல நெல்லையில் இருந்து கட்சிக்காரர் ஒருத்தர் ராத்திரி 11 மணிக்கு வர்றாரு. பார்க்க முடியாதுன்னா சொல்ல முடியும்? பார்த்துதான் அனுப்பினேன். நம்ம அமைச்சர்களும் சரி... எம்.எல்.ஏ.க்களும் சரி வந்து பார்த்துட்டுதான் இருக்காங்க. நான் என்ன தினகரன் மாதிரி திடீர்னு வந்தவனா? கட்சிக்காக உழைச்சுதானே இந்த இடத்துக்கு வந்திருக்கேன். ராஜபக்‌ஷே மாதிரியும், எமன் மாதிரியும் எல்லாம் சிலர் என் படம் போட்டு நோகடிக்கிறாங்க. இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வரணும். என்ன செய்யலாம் சொல்லுங்க' என்று கேட்டாராம்.
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், ' எது நடந்தாலும் அரசாங்கத்தை குறை சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க. நம்ம வேலையை நாம பார்த்துட்டே இருப்போம். இன்னும் ஒரு வாரம் அதிகபட்சமாக இதை பேசுவாங்க. அடுத்து வேறு ஒரு பிரச்சினை வந்தால் இதை மறந்துடுவாங்க. நான் உங்ககிட்ட முன்பே சொன்னேன் இல்லையா... ஒரு திட்டம் பற்றி. அதாவது 6ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு டேப் (tab) கொடுப்பது சம்பந்தமாக... அந்த லிஸ்ட் எடுத்துட்டோம். மொத்தமாக 60 லட்சம் பேரு இருக்காங்க. அந்த குழந்தைகளுக்கு இலவசமாக டேப் கொடுக்க போறதாக அறிவிச்சுடலாம். அது மக்கள் மத்தியில் உடனடியாக நமக்கு நல்ல பெயரை உண்டாக்கிடும். தூத்துக்குடியை மறந்துட்டு டேப் பற்றி பேச ஆரம்பிச்சிருவாங்க' என்று செங்கோட்டையன் சொன்னாராம்.
அதற்கு முதல்வர், ' தூத்துக்குடி பிரச்னையை மறக்கிறாங்களோ இல்லையோ டேப் கொடுப்பது நல்ல திட்டம்தான் அதை உடனே யோசிப்போம்...' என்று சொல்லியிருக்கிறார். அதற்கான ஆயத்த வேலைகளில் கல்வித் துறை இறங்கியிருக்கிறது. எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம்! "

கருத்துகள் இல்லை: