வியாழன், 24 மே, 2018

ஸ்டெர்லைட்டை மீண்டும் இயக்குவோம்’- சொல்கிறார் வேதாந்தா தலைவர் அனில் அகர்வால்

மலையரசு - விகடன் : 'தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களைக் கேட்கும்போது
எனக்கு வருத்தம் உண்டாகிறது' என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நிகழ்த்த துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பொதுமக்களுக்கும் போலீஸுக்கும் இடையே தொடர்ந்து மோதல் உருவாகும் சூழ்நிலை தொடர்வதால், தூத்துக்குடியில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துவருகிறது. நிலவிவரும் பதற்றத்தைத் தணிக்க அமைதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசும் மாநில அரசும் தெரிவித்துள்ளன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அனுதாபங்களைத் தெரிவித்துவருகின்றனர். மேலும், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு, வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``நேற்று நடந்த சம்பவங்களைக் கேட்கும்போது வருத்தம் ஏற்படுகிறது.


இது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டெர்லைட் ஆலை, வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக முடக்கப்பட்டுள்ளது. எனினும், ஆலையைத் தொடங்குவதற்கு அரசு மற்றும் கோர்ட் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். அனுமதிபெற்று, ஆலையை மீண்டும் இயக்குவோம். அரசு வகுத்துள்ள விதிமுறைகளை நாங்கள் கண்டிப்பாகப் பின்பற்றிவருகிறோம். தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையைச் செழிப்படைய வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தூத்துக்குடி மக்களின் உறுதுணையோடு, அவர்களின் வாழ்க்கை மேம்பட ஆலையைத் தொடர உள்ளோம். தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்றத்துக்கு நான் உட்பட்டுள்ளேன். மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன், நேற்று நடந்த சம்பவங்கள் எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: