சனி, 26 மே, 2018

காடுவெட்டி குரு மரணம் - 9 மாவட்டங்களில் கடைகள் அடைப்பு: பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

காடுவெட்டி குருவால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி
நக்கீரன் :வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் சட்டமன்ற
உறுப்பினருமான காடுவெட்டி குரு அவர்கள் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார்.< அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கொண்டு செல்லப்பட்டது. நாளை உடல் தகனம் நடக்கிறது. ஜெ.குரு மறைவைத் தொடர்ந்து சொந்த ஊரான காடுவெட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ் மீது கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
பண்ருட்டி, புதுநகர், முதுநகர், ரெட்டிச்சாவடி, சிதம்பரம், கருவேப்பிலங்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி டவுன்ஷிப் ஆகிய இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, அரியலூர், உடையார்பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.<"> அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பகுவிக்கப்பட்டனர்.

 
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 16 பஸ்கள் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் என்ற இடத்தில் நெய்வேலியில் இருந்து பெங்களூர் சென்ற பஸ்சும், திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் சென்ற பஸ்சும், சிதம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை சென்ற பஸ்சும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது.
திண்டிவனத்தை அடுத்த காளை பகுதியில் சென்ற சென்ற பஸ் நள்ளிரவில் கல்வீசி உடைக்கப்பட்டது. செஞ்சியில் 3 பஸ்கள் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 19 பஸ்கள் சேதம் அடைந்தது. பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன.
திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தில் நேற்று இரவு 9 மணியளவில் தனியார் கம்பெனியில் இருந்து ஆட்கள் ஏற்றிச் சென்ற 3 பஸ்கள் மீது 6 பேர் கும்பல் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. அருகில் இருந்த 2 பேக்கரி கடைகள் மீதும் அவர்கள் கல்வீசி தாக்கி தப்பி சென்று விட்டனர்.
சேலம் சீல நாயக்கன்பட்டி பைபாசில் சென்னையில் இருந்து கோவை சென்ற பஸ் உடைக்கப்பட்டது. டால்மியா அருகே பெங்களூர் சென்ற ஆம்னி பஸ்சும் கல்வீசி தாக்கப்பட்டது. மேச்சேரி, காடையாம்பட்டி, தீவட்டிபட்டி, ஆத்தூர் பகுதியில் 7 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. மொத்தம் 9 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டது.
9 மாவட்டங்களில் மொத்தம் 75 பஸ்கள் உடைக்கப்பட்டதாகவம், இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: