திங்கள், 21 மே, 2018

கடலூர் மீனவர்களின் மோதல் பின்னணி!

மின்னம்பலம்: கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் சோனங்குப்பம் மீனவர்களுக்கும் ஏற்பட்ட பயங்கரமான மோதலில் பஞ்சநாதன் என்ற மீனவர் வெட்டி சாய்க்கப்பட்டார் மற்றும் சிலர் வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மீனவர்களின் மோதல் பின்னணி!கடந்த 15ஆம் தேதி தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் சோனங்குப்பம் மீனவர்களுக்கும் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இச்சம்பவத்தில் கடலூர் முதுநகர் போலீஸாரும் கடலூர் புதுநகரைச் சேர்ந்த தேவனாம்பட்டினம் போலீஸாரும் மற்றும் சிறப்புப் படையினரும் சேர்ந்து வெவ்வேறு வழக்குகளில் இதுவரையில் 27 மீனவர்களைக் கைது செய்துள்ளனர். தேவனாம்பட்டினம் கிராமத்தில் கைதுக்குப் பயந்து கடந்த ஆறு நாள்களாக அனைவரும் தலைமறைவாக இருந்துவருகிறார்கள். இதனால் தேவனாம்பட்டினத்தில் ஆண்கள் இல்லாமல் இருப்பதால் ஊர் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள், மோதல்களின் பின்னணி குறித்து விசாரித்தோம். “கடலில் சுருக்கு வலை மற்றும் மடி வலை போட்டு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடற்கரையிலிருந்து 10 நாட்டிக்கல் தூரத்தில் சோனங்குப்பம் மீனவர்கள் சுமார் 50 பேர் சுருக்கு வலை போட்டிருந்தார்கள். அதைப்பார்த்த தேவனாம்பட்டினம் மீனவர்கள் 20 பேர் அவர்களைப் பார்த்து கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு அது பின்னர் கைகலப்பு, மோதலாக உருவெடுத்தது.

இந்தத் தகவல் பரவியதால் சின்னப்பட்டினமும் பெரியபட்டினமும் சேர்ந்து நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயுதங்களுடன் திரண்டு வந்து சோனங்குப்பத்திலுள்ள மக்களைத் தாக்கியுள்ளனர். போலீஸாரிடம் ஆயுதங்களோ அல்லது போதுமான ஆள் பலமும் இல்லாததால் கலவரத்தைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீஸ் எஸ்.பி தேவனாம்பட்டினம் மீனவர் கிராமத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இக்கலவரத்தில் நடந்தது குறித்து தேவனாம்பட்டினம், சோனங்குப்பம் மீனவர்கள் கிராமத்தில் உள்ளவர்களிடம் பேசியபோது, “தேவனாம்பட்டினம் ஊர் சண்டையில் மட்டும் இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு மரணமடைந்துள்ளார்கள். இந்த மோதலில் சோனங்குப்பத்தை சேர்ந்தவர்கள் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், எந்த வழக்கிலும் தண்டனை பெற்றதில்லை அனைத்து வழக்குகளும் சமாதானமாகிவிடும்” என்றார்.
“சிறைக்குப் போய்விட்டால் வழக்கு நடத்த படகுக்கணக்கில் வரி போடுவோம். அந்தப் பணத்தில் தினந்தோறும் சிறையில் இருப்பவரைப் பார்க்க உணவுப்பொருள்கள் வாங்கிப் போய் கொடுப்போம். பெயிலில் எடுப்போம். வழக்கு நடத்துவோம். அவருக்கு ஒரு பைசா செலவாகாது. சிறைக்குப் போனவர்கள் குடும்பத்துக்கு உதவிப் பணம் கொடுக்க மாட்டோம். அதை அவர்கள் வாங்கவும் மாட்டார்கள். கௌரவத்தைப் பார்ப்பார்கள். வழக்கைச் சமாளிக்க ஊர் வரி போடுவோம்.” இவ்வாறு தேவனாம்பட்டினம் மீனவர்கள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை: