வியாழன், 1 மார்ச், 2018

ஏழு மாணவிகள் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர்.. சத்தீஸ்கார் விடுதியில் ...

சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய மாணவிகள்!மின்னம்பலம் : சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 வயதுச் சிறுமியை 6 மாணவிகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள பெண்ட்ரா பகுதியில் எஸ்சி/எஸ்டி மாணவிகளுக்காக அரசு விடுதி நடத்தப்படுகிறது. அந்த விடுதியில் உள்ள சீனியர் மாணவிகள் துவைத்து வைத்திருந்த துணிகளை 7 வயது சிறுமி கை தவறிக் கீழே போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவிகள் அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர்.
பிலாஸ்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் ஆரிஃப் ஷேக், “சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 6 மாணவிகள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமான போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தாய், “கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி என்னுடைய மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக விடுதிக்குச் சென்றேன். அப்போது என் மகள் அடிவயிறு மற்றும் பிறப்பு உறுப்பில் வலிப்பதாக அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் விசாரித்தபோது, பிப்ரவரி 23ஆம் தேதி சீனியர் மாணவிகள் அவளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் மாணவிகள் மீது புகார் அளித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர் நலத் துறை உதவி ஆணையர் அவினாஷ் ஸ்ரீவாஸ், “துணிகளுக்காக விடுதியில் மாணவிகளிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது உண்மையே. இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவிகள் மீதான குற்றச்சாட்டை ஒரு குழு ஆராய்ந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு, தலைநகர் டெல்லி மோதி நகரில், அரசுப் பள்ளியில் படித்துவந்த 7 வயதுச் சிறுமிக்கு சீனியர் மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இரண்டு மாணவிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: