செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

சிரியா தாக்குதல்: மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

சிரியா தாக்குதல்: மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!மின்னம்பலம்: சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா ஒப்புதல் அளித்தும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்துக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆயுதம் தாங்கிய போரில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் ஆதரவு படைக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கின. ரஷ்ய அரசு ஆதரவுப்படையினர் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழலை சாதகமாகக் கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில், சிக்கி 560க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகப் போர் மனித உரிமை கண்காணிப்பகம்
தெரிவித்திருந்தது. பலியானவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவம் மற்றும் நிவாரணப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், கடந்த 24ஆம் தேதியன்று 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஆதரவு அளித்தது. இதனை அடுத்து போர் நி்றுத்தம் தாமதமின்றி உடனடியாக அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டது. ஆனால், போர் நிறுத்த தீர்மானத்தை கண்டுகொள்ளாமல் அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆதரவு படைகள், மக்கள் மீது விஷவாயு தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதனால் 24 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதே நிலை நீடித்தால் நிலைமை மிக மோசமாக ஆகக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரூன் மற்றும் துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் ஆகியோர் நேற்று (பிப்ரவரி 26) சிரியாவின் நிலவரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டுள்ளார். இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொயகு, இந்தப் போர் நிறுத்தம், உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் 2 மணி வரை தினமும் தொடரும்" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: