புதன், 28 பிப்ரவரி, 2018

நீதிபதி ரத்னவேல் பாண்டியன் - திமுக மாவட்ட செயலாளராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகி மண்டல் ஆணைய தீர்ப்பை வழங்கிய

Sivasankaran Saravanan : நிறைய பேர் கருதுவதை போல ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் அரசியல் வெற்றியை பெறுவதோ ஆட்சியமைப்பதோ இல்லை. மாறாக அவர்களது ஸ்லீப்பர் செல்களை ஐஏஎஸ் உள்ளிட்ட ஆட்சியதிகார பதவிகளில் அமர்த்துவதுதான் அவர்களது தலையாய பணி. ராணுவம், நீதித்துறை, ஆட்சிப்பணி என சகல துறைகளிலும் அவர்களது ஆட்கள் இருப்பார்கள். அதனால் தான் காங்கிரஸ் ஆட்சி நீடித்தபோது கூட அது கவலைப்படவில்லை.
அதுபோல திராவிட இயக்க அபிமானிகள் அதிகாரப்பணிகளில் கோலோச்சுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்று உறுதியாக சொல்லமுடியும். திராவிட இயக்கத்தின் பலனாக உயர் பதவிகளுக்கு சென்றவர்களுக்குக் கூட தாங்கள் அதனால் தான் இத்தகைய உயர் இடத்திற்கு வந்தோம் என்ற உணர்வு இருப்பதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு சில சொற்ப நபர்கள் தான் இருப்பார்கள்.
அப்படிப்பட்ட சொற்ப எண்ணிக்கையில் முக்கியமானவர் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள். அவர் ஸ்லீப்பர் செல் கூட இல்லை. திமுகவின் மாவட்ட செயலாளர் என்ற பதவியிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியானவர்!
மண்டல் கமிசன் பரிந்துரை தொடர்பான உச்சநீதிமன்ற மன்ற வழக்கில் 11 நீதிபதிகளில் ஒருவராக இருந்து இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதிய நீதிமான். அதுவும் அந்த தீர்ப்பு 11 பேரில் 6-5 என்ற கணக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு!

ஒரு முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து நாட்டின் மிக முக்கிய வழக்கில் பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுகிற வகையில் சமூகநீதி யை காக்கிற ஒரு தீர்ப்பினை வழங்கியவர்!
பெரியாரின் தொண்டர், சமூகநீதி காத்த செம்மல் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தனது 89 வது அகவையில் இன்று காலமான செய்தி ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட சோகம்..!

கருத்துகள் இல்லை: