புதன், 28 பிப்ரவரி, 2018

அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அடித்து டிரைவர் கொலை ...... ,, ?

tamilthehindu :தன்னுடைய கார் ஓட்டுநர் மரணத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கமளித்துள்ளார். டிரைவருக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுநர் சௌந்தரராஜன் வேணுகோபால் இன்று காலை திடீரென உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. சௌந்தரராஜனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் சௌந்தரராஜனின்  தலையிலும், உடலிலும் காயங்கள் இருந்ததால் அவரை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என அஞ்சலி செலுத்தச்சென்ற அமைச்சரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உண்மை நிலை குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''இன்று அதிகாலை ஊரிலிருந்து சென்னை வந்த என்னை கார் ஓட்டுநர் சௌந்தரராஜன் ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்தார். அப்போது அவரிடம் அவரது குடும்பத்தில் நடந்த சுப நிகழ்ச்சி குறித்துக் கேட்டேன். ஊரில் வேலை இருந்ததால் வர இயலவில்லை மாலையில் வருகிறேன் என்று சொன்னேன்.

பின்னர் அவர் என்னை எனது அமைச்சர் இல்லத்தில் இறக்கி விட்டார். நான் வீட்டுக்குள் சென்றேன். பின்னர் அவர் சமையல்காரரிடம் கூறி காலை சிற்றுண்டி சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் காரை துடைத்துள்ளார்.
பின்னர் அருகிலிருந்த இன்னொரு ஓட்டுநர் நாராயண சாமியிடம் எனக்கு உடம்பு சரியில்லை, மருத்துவமனைக்கு போகிறேன் ஐயா வந்தால் நீங்கள் அழைத்துச்செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
உடல்நிலை சரியில்லை என்றால் வாருங்கள் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று எனது பிஎஸ்ஓ அழைத்துள்ளார்.
'அமைச்சர் வீரமணியின் கார் ஓட்டுநர் எனது நண்பர் அவரை அழைத்துள்ளேன் அவர் வந்தவுடன் மருத்துவமனைக்குச் செல்கிறேன்' என்று சௌந்தரராஜன் மறுத்துள்ளார்.
பின்னர் காரிலிருந்த அவரது துணிப்பையை எடுத்துக்கொண்டு அவரது அறைக்கு சென்று ஓய்வு எடுத்துள்ளார். எனக்கு முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் ஒரு நிகழ்ச்சி இருந்ததால் சரியாக 9.15 மணிக்கு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்தேன்.
ஓட்டுநர் நாராயணன் காரை இயக்க அமர்ந்தார். நான் ஓட்டுநர் சௌந்தர் எங்கே என்று கேட்டேன். அவருக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவமனைக்குச் செல்லப் போவதாக நாராயணன் கூறினார். நான் என் பாக்கெட்டில் இருந்த 4000 ரூபாயை எனது பிஎஸ்ஓவிடம் கொடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு கோட்டைக்குப் போய் விட்டேன்.
பிஎஸ்ஓ சென்று அழைத்தபோது, 'அமைச்சர் வீரமணியின் கார் ஓட்டுநர் வந்துவிடுவார் அவருடன் செல்கிறேன்' என்று சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை என்ன செய்ததோ தெரியவில்லை. அவராக நடந்து வெளியே கார்டு ரூமுக்கு வந்து அங்கிருந்த காவலர் சரவணனை அழைத்து மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார்.
இருசக்கர வாகனம் டிஜிபி அலுவலகம் தாண்டி குயின்மேரிஸ் கல்லூரி அருகே செல்லும் போது சௌந்தர்ராஜன்,  சரவணன் உடலை அழுத்திப் பிடித்துள்ளார். அவர் என்ன ஆச்சு என்று கேட்பதற்குள் பேச்சு மூச்சு இல்லாமல் சாலையில் விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சௌந்தர்ராஜன் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் நான் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு அவரது உடலைப் பார்த்தேன். அவர் கீழே விழுந்ததால் உடலில் சிராய்ப்புகள் இருந்தன. தலையில் ஏற்பட்ட காயத்தை நான் பார்க்கவில்லை. பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினேன்.
வழியிலேயே இறந்து போனதால் அவர் உடலை எந்த அனுமதியும் இல்லாமல் எடுத்துச் செல்லலாம் என்று மருத்துவமனையில் கூறினர். அவர் உடலை சொந்த ஊரான செஞ்சிக்கு எடுத்துச்செல்வதாக அவர் மனைவி தெரிவித்தார். அவரது உடலை சூளைமேட்டில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் சென்று ஓரிரண்டு மணி நேரம் வைத்துவிட்டு எடுத்துச் செல்லுங்கள் அதுதான் முறை என்று தெரிவித்தேன்.
அதன் படி அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். நான் அங்கு அஞ்சலி செலுத்தச் சென்றேன். அப்போது அங்கிருந்த உறவினர்கள் என்னிடம் மூன்று குற்றச்சாட்டை வைத்தார்கள். மோட்டார் சைக்கிளில் அழைத்த்துச் சென்று விபத்து செய்து  கொன்று விட்டார்கள் என்றும், பிஎஸ்ஓ அடித்துக் கொன்றுவிட்டார் என்றும், போலீஸார் அடித்துக்கொன்று விட்டனர் என்றும் குற்றம் சாட்டினர்.
நான் சமாதானப்படுத்திவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் ஒரு தொலைக்காட்சியில் மந்திரியே அடித்துக்கொன்று விட்டார் என்று செய்தி போடுகிறார்கள். ஒரு செய்தியை போடும் முன் என்னிடம் கேட்டு போடலாம். என்னிடம் கேட்க விருப்பம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட இடத்தில் என்ன நடந்தது என்றாவது கேட்டுப் போடலாம். இப்படிப் போடுவது என்ன நியாயம்.
இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
ஓட்டுநர் வீட்டுக்கு சென்றபோது நீங்கள் விரட்டப்பட்டீர்களாமே?
அப்படி எல்லாம் நடக்கவில்லை. நீங்களே பார்த்திருப்பீர்கள்.
அவர் உடல்நிலை சரியில்லை என்று சொன்னபோது 108 ஆம்புலன்ஸை ஏன் அழைக்கவில்லை?
நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறிவிட்டேன், நான் கோட்டையில் முதல்வருடன் இருந்தேன். அவராகவே நடந்த்கு வந்து கார்டு ரூமில் இருக்கும் காவலரை அழைத்துச் செல்கிறார். அதன் பிறகும் இதே கேள்வியை கேட்டால் நான் என்ன சொல்வது.
இங்குள்ள கண்காணிப்பு கேமராவில் அதிகாலையில் அவர் டூட்டிக்கு வந்தது முதல் அவர் மருத்துவமனைக்கு கிளம்பிச் செல்வது அவரை அனைத்தும் பதிவாகி உள்ளது. வேண்டுமானால் அதன் பதிவுகளை தருகிறேன். பாருங்கள்.
சௌந்தர்ராஜனின் மனைவி உங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளாரே?
கிடையவே கிடையாது. அவரை மருத்துவமனையில் பார்த்துப் பேசினேன். ஆறுதல் கூறினேன். உங்கள் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்கிறோம் என்று தெரிவித்தேன்.
உங்களை விரட்டி அடித்தது ஏன்?
மீண்டும் மீண்டும் தவறான பதிவைச் செய்கிறீர்கள். நடந்த சமபவத்தை நான் விளக்கிக் கூறிய பின்னரும் உங்களுக்கு தேவைப்படும் ஏதோ ஒரு பதிலுக்காக என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். அங்கு அவரது மரணத்தில் மர்மம் என்று சொன்னபோது அப்படி இருக்க வாய்ப்பில்லை, வேண்டுமானால் உடலை போஸ்ட்மார்டத்துக்கு அனுப்புங்கள் அதில்தெரிந்துவிடும் என்று கூறினேன்.
இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: