ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

கருணை இல்லம் உடல் உறுப்பு விற்பனை .... சந்தேகம் ... ஏராளமான விதிகள் மீறப்பட்டுள்ளதால் ..

Ellaam Samam · திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கருணை இல்லம் இதேபோல் உடல் உறுப்பு விற்பனை, கொலைகள் நடப்பதாகச் செய்தி வந்தது இப்போது இந்தச் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது
tamilthehindu : உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் செயல்படும் கருணை இல்லத்தில் நிகழ்ந்துள்ள விதிமீறல்கள் குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் ராஜு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் இறக்கும் தருவாயில் ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கருணை இல்லத்தில் சுமார் 350 பேர் தங்கியுள்ளனர்.
இங்கு உயிரிழக்கும் முதியவர்களை சிறிய பெட்டி போன்ற அறையில் வைத்து சிமென்ட் பூசி மூடி உடல் அடக்கம் செய்யும் முறையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பவே இதுபோன்ற முறையில் உடல் அடக்கம் செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விளக்கம் அளிக்க நோட்டீஸ்

இங்கு வருவாய் கோட்டாட்சியர் ராஜு தலைமையில் சுமார் 6 துறைகளைச் சேர்ந்த 50 அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல்வேறு துறைகளில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை சார்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், “இந்தக் கருணை இல்லத்தில் உள்ள சுமார் 100 பேருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. அவர்களை இல்லத்தில் இருந்து வெளியில் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இங்கு இறப்பவர்கள் அனைவருக்கும் உரிய இறப்புச் சான்று பெரும் வகையிலான நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உளவுத்துறை விசாரணை

இந்தக் கருணை இல்லம் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகளும் கருணை இல்லம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். இந்தக் கருணை இல்லத்தில் உள்ளவர்கள், இங்கு நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை அறிக்கைகளை அரசுக்கு அனுப்ப உள்ளனர்.

சிறைபோல் உணர்வதாக புகார்

இந்தக் கருணை இல்லத்துக்குள் செய்தியாளர்கள் சிலர் சென்றபோது, “பலர் தங்களை வெளியில் விட மறுக்கின்றனர் என்றும், தங்கள் வீட்டுக்குக் செல்ல வேண்டும் என்றும் கேட்டனர். தங்களுக்கு பிள்ளைகள், உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நாங்கள் வசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் சிலர் இந்தக் கருணை இல்லத்தில் இருப்பதைச் சிறையில் இருப்பதைப்போல் உணர்கிறோம்” என்றும் தெரிவித்தனர்.
வீட்டுக்குச் செல்ல விரும்புபவர்களை வெளியில் விட மறுப்பது குறித்து கருணை இல்ல நிர்வாகி தாமஸிடம் கேட்டபோது, “வெளியில் செல்ல வேண்டும் என்று கூறுபவர்கள் பலர் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள். ஓரிரு தடவை நாங்கள் பார்ப்போம். அவர்கள் மீண்டும் கேட்டால் எங்குச் செல்வீர்கள், வெளியில் சென்று உங்களால் தனியாக பிழைக்க முடியுமா என்பதை எல்லாம் கேட்போம். அதன் பிறகே அவர்கள் எங்குச் செல்ல விரும்புகிறார்களோ அங்கு அனுப்பி வைப்போம். சென்னை, செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு நாங்களே வேனில் அழைத்துச் சென்றுவிடுவோம். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து ரயிலில் அனுப்புவோம்” என்றார்.
இப்போது பலர் கேட்கிறார்களே என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, “அவர்களுக்கு நீங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்வதாக இருந்தால் தாராளமாக அழைத்துச் செல்லுங்கள். இவர்கள் வெளியில் சென்றால் மீண்டும் தெருவோரத்தில் கிடந்து நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது. அதுபோல உள்ளவர்களை வெளியே அனுப்பி வைப்பது அதர்மம்” என்றார்

கருத்துகள் இல்லை: