வியாழன், 12 ஜனவரி, 2017

வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரை காணவில்லை .. கொலை? மனைவி சந்தேகம்!


ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய ராணுவ வீரரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று அவரது மனைவி முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றி வரும் தேஜ் பதூர் யாதவ் என்பவர் மொபைல் மூலம் தான் பேசிய 4 நிமிடம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
’எல்லையில் ராணுவ வீரர்கள் கால்கடுக்க 11 மணி நேரத்திற்கு மேலாக கடுங்குளிரில் கஷ்டப்பட்டு பணியாற்றி வருகிறோம்.
எங்களுக்கு அரசு தேவையான உணவு பொருட்களை வாங்கி அனுப்புகிறது. ஆனால், எங்கள் உயர் அதிகாரிகள் அதை சட்ட விரோதமாக விற்பனை செய்து பணமாக்கிக்கொள்கிறார்கள். பல நாட்கள் வெறும் வயிற்றுடன் பசியுடன் தூங்க வேண்டியுள்ளது’ என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவைக் கண்டு ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்
இந்நிலையில் தேஜ் பகதூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர், மீது பலமுறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும் குடிகாரர் எனவும் பாதுகாப்பு படை கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த அவரது மனைவி ஷர்மிளா, ’மனநலம் பாதிக்கப்பட்டவரை எப்படி பாதுகாப்பு பணிக்கு எல்லைக்கு அனுப்பி வைத்தீர்கள்? உயர் அதிகாரிகளின் ஊழலை வெளிக்கொண்டு வந்த தனது கணவரை திங்கட்கிழமை முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கலாம். இதுகுறித்து அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அதன்மூலம், எனது கணவருக்கும் குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இப்போது வரை அவர் எங்கு உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கலாம் என பாதுகாப்புப் படை வீரர்களே அச்சப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: