ஞாயிறு, 6 நவம்பர், 2016

வைகோ-வின் அதிமுக ஆசை! விழித்துக்கொண்ட திருமா!

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் முடிந்து ஐந்து மாதங்களைக் கடந்த
நிலையில், கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகளில் கூடுதலாகவே மாற்றங்கள் தொடர்கின்றன. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் எந்த மாற்றங்களும் நிகழாத நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் மட்டும்தான் தேர்தல் தோல்வி, தலைவர்களின் கருத்து முரண் என தொடரும் பிரச்னைகளால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது மக்கள் நலக் கூட்டணி நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இது நமது கருத்து அல்ல. மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் கருத்து முரணும், அதனால் நிகழ்ந்து வருகின்ற செயல்பாடுகளுமே மக்கள் நலக் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கான விடையை வெளிப்படுத்தி வருகிறது.

சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தேமுதிக முதலில் கூட்டணியை விட்டு வெளியேறியது. அதனைத் தொடர்ந்து தமாகா விடைபெற்றுக் கொண்டது. எஞ்சியுள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் எந்த நேரத்திலும் கூட்டணிக்கு குட்பை வைக்கலாம் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றன என்கிறது அரசியல் வட்டார தகவல்.
மதிமுக பொதுச்செயலாளரான வைகோ அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வோடு கைகோக்கும் உள் நோக்கத்தோடு, ஆளுங்கட்சியை எதிர்க்கும் எதிர்க்கட்சியைப் போல தொடர்ந்து திமுக-வைக் குறிவைத்தே விமர்சனம் செய்து வருகிறார்.
அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோதுகூட, “காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று சொல்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று சில மாதங்களே ஆன நிலையில் இன்னும் நான்கு மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்று துரைமுருகன் கூறி இருப்பது பகல் கனவு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டு வெளியே வந்து திமுக-வினர் இவ்வாறு பேசுவது மனிதநேயமற்ற செயல். திமுக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை விரைவில் 92 ஆகும் என்று ஸ்டாலின் சொல்வது கணித மேதை ராமானுஜரையும் மிஞ்சும்படியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் கருத்து வேறுபாடுகள் நாள்தோறும் வளர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், கூட்டணி பிளவுபட்டால், வைகோ-வுக்கு கூட்டணி அமைக்க அதிமுக-வைத் தவிர வேறுவழி இல்லை. தொடர்ந்து பாஜக-வுடன் எதிர்ப்பு நிலையில் இருப்பதாலும், காங்கிரஸ், திமுக-வோடு கூட்டணியில் உள்ளதாலும் வைகோ காங்கிரஸ், பாஜக-வோடு கூட்டணி அமைக்க முடியாது என்ற காரணத்தால்தான் அதிமுக-வுக்கு ரூட் போடும் கணக்கில் திமுக-வை விமர்சித்து வருகிறார்.
எனவேதான், அண்மையில் திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தை விமர்சித்ததோடு, அக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்வதற்கும் முட்டுக்கட்டை போட்டார். அந்த நோக்கில்தான் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்காது என்று வைகோ அறிவித்தார்.
இந்நிலையில், வைகோவின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்குச் செல்ல திட்டம் வகுத்திருக்கிறார். எனவேதான், இனிமேலும் மக்கள் நலக் கூட்டணியில் தொடர்ந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற கட்சியினரின் ஆலோசனையின்படி திமுக கூட்டணியில் இடம்பெறுவதற்கான காய் நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டார். அதன் தொடக்கமாகத்தான், திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள நினைத்தார். அது, நடைபெறமால் போனதைத் தொடர்ந்து, அடுத்து, புதுவை நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முதல்வருமான நாராயணசாமிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் நாராயணசாமிக்கு நல்லதொரு செல்வாக்கு உண்டு. எனவேதான், மேலிட செல்வாக்குள்ள நாராயணசாமியுடன் கைகோர்த்து திமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கான புது வழியை வகுத்திருக்கிறார் திருமாவளவன். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஐக்கியமானால்தான், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி. ஆவதற்கான வாய்ப்பு அமையும் என்பது இலக்கு.
கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரையில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகளில் இடம் பெற முடியாது என்பதால், நமக்கும் அதிமுக-வுடன் கூட்டணி சேர்வதுதான் சரியாக வரும் என்பதால், வைகோ-வுடனான கருத்துக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஒத்துப்போகிறார்கள். அதனால்தான், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் இருந்தும் விலகி நிற்கின்றனர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆக்டிவான தலைவராக நாம் வலம் வரலாம் என்ற நோக்கோடு, அதிமுக கூட்டணிக்காக மறைமுகக் காய் நகர்த்தலை தொடங்கி இருக்கிறார் வைகோ. அதன் வெளிப்பாடாகத்தான் திமுக மீதான தாக்குதல்களோடு, திருமாவளவனுக்கும் அவ்வப்போது கிடுக்கிப்பிடி போட்டு தடுத்து வருகிறார். ஆனால், திருமா அணி மாறப் போவது உறுதி என்பதுதான் உண்மை. எல்லா கட்சிகளின் எண்ணமும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி இருப்பதால், வைகோ-வால் உள்ளுக்குள் நடக்கும் மக்கள் நலக் கூட்டணியின் மல்லுக்கட்டு விரைவில் முடிவுக்கு வந்து உடைவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: