வெள்ளி, 9 மே, 2025

புகார்தாரர் மனைவியிடம் அத்துமீறியதாக கைதான ஆவடி குற்றப் பிரிவு காவலர் பணியிடை நீக்கம்

Hindu Tamil  : ஆவடி: புகார்தாரர் மனைவியிடம் அத்துமீறியதாக கைதான ஆவடி குற்றப் பிரிவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், குமரன் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 13-ம் தேதி இரவு, ஆவடி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு, தன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளை வைத்துவிட்டு, கடையினுள் சென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மாயமானது.
இதுகுறித்து, இளைஞர் அளித்த புகாரின் பேரில் ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



விசாரணையில், மாயமான மோட்டார் சைக்கிள், பட்டாபிராம், காந்தி நகர் அருகே கேட்பாரற்று கிடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார், மோட்டார் சைக்கிளை மீட்டு, புகார்தாரரின் மனைவியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி ஆவடி குற்றப்பிரிவில் பணிபுரியும் காவலர் ஹரிதாஸ் (30), புகார்தாரரின் மனைவியான 22 வயது பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘நீ அழகாக இருக்கிறாய், ஆவடி செக்போஸ்ட் அருகில் உள்ள விடுதிக்கு வா’ என அழைத்ததாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன் அண்ணனுடன் விடுதிக்கு சென்று, ஹரிதாஸை பிடித்து ஆவடி போலீஸாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, ஹரிதாஸிடம் ஆவடி காவல் உதவி ஆணையர் கனகராஜ் விசாரணை நடத்தினார். விசாரணையின் அடிப்படையில், காவலர் ஹரிதாஸ், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஹரிதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆவடி காவல் ஆணையர் சங்கர், இன்று (மே 8) காவலர் ஹரிதாஸை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆவடி காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: