செவ்வாய், 15 மார்ச், 2016

பாஜகவுக்கு (JNU) பல்கலைகழங்கள் மீது ஏன் வெறுப்பு?.....சுயமாக சிந்திக்க விடலாமா?

வினவு.com :இங்கே நிலவும் விவாதச் சூழல் பலரும் நினைப்பது போல் முற்றிலுமாக இடதுசாரி சாய்வோடு நடக்கும் ஒன்றல்ல. ஒருவகையான லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படையிலான விவாதங்களே இங்கே நடக்கின்றன
JNU நேரடி ரிப்போர்ட் 4 ”படிக்கிற காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் அரசியலில் ஈடுபடுவது சரியல்ல என்பது ஜே.என்.யு மாணவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று.. இதற்கென்ன சொல்கிறீர்கள்?”
“விவசாயி விவசாயத்தை மட்டும் கவனிக்க வேண்டும். தொழிலாளி வேலை செய்வதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். மீனவர் மீன் பிடிப்பதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பம் இருப்பவர்கள் குடும்பத்தையும், இல்லாதவர்கள் எப்படி ஒரு குடும்பத்தை ஏற்படுத்துவது என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்ல வருகிறீர்களா?”

”உங்கள் பதில் இடக்கு மடக்காக இருக்கிறதே?”
“சரி, இப்படிக் கேட்கிறேன் – மாணவர்களின் கோரிக்கைகளை மாணவர்கள் தானே முன்வைக்க வேண்டும்? மாணவர்கள் சமுதாயத்தின் ஒரு அங்கம் என்கிற வகையில் அவர் சமுதாயத்தை பாதிக்கும் விசயங்களில் தங்களது கருத்தை ஏன் சொல்லக் கூடாது?”

“நீங்கள் சொல்வதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால், இந்துத்துவ சாய்வுள்ளவர்கள் மிக இயல்பாக உங்கள் வாதங்களை ஒற்றை வரியில் எதிர் கொண்டு விடுவார்கள்..”
”இருக்கலாம்.. பதிலுக்கு நாங்களும் கேட்போம், உங்களது ஏ.பி.வி.பி என்ன கிழவர்கள் அமைப்பா?”
”ஏ.பி.வி.பி பற்றி சொன்னீர்கள்.. பொதுவாக அவர்கள் குருபூர்ணிமா நடத்துவது, ஆசிரியர்களை குருவாக உருவகித்து அவர்களின் கால்களுக்கு பாத பூஜை செய்வது என்று தான் தங்களது அமைப்புச் செயல்பாடுகளை வைத்துக் கொள்கிறார்கள். பொதுவாக நிர்வாகத்தைக் கேள்வி கேட்க மாட்டார்கள் – அப்படியே கேட்டாலும் அது இந்துத்துவ அரசியலின் நலன்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும். ஜே.என்.யுவில் எப்படி?”
“இங்கே வளாகத்திற்குள் அந்தமாதிரி கோமாளித்தனங்களை அவர்கள் வைத்துக் கொள்வதில்லை. வளாகத்திற்குள் ஏ.பி.வி.பியினர் புகை பிடிப்பதைக் கூட நீங்கள் பார்க்கலாம். சாதி வெறியை பச்சையாக வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். எங்களோடான விவாதங்களில் அம்பலப்பட்டு விடுவார்கள். விவாத மேடையில் வலதுசாரித் தத்துவமும் இடதுசாரித் தத்துவமும் நேரிட்டு சந்தித்துக் கொண்டால் அவர்களின் போலித்தனங்களை உரித்து அம்மணமாக நிறுத்துவது எளிதானது. வலதுசாரிகளுக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?”
”மற்ற அமைப்புகள்…?”
”வெளியே சமூகத்தில் எத்தனை விதமான அமைப்புகள் உண்டோ அத்தனை விதமான அமைப்புகளுக்கும் இங்கே பிரதிநிதித்துவம் உண்டு. என்ன, விகிதாச்சாரங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்”
“ஆம் ஆத்மி?”
”ஆம் ஆத்மி என்பது அரசியல் அமைப்பாக இல்லை.. அது ஒரு சமரச போக்கு. இங்கே அரசியலற்ற நபர்களிடம் அந்தப் போக்கிற்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. குறிப்பாக சி.பி.எம்மின் மாணவர் சங்கத்திலிருந்து விலகி டி.எஸ்.எஃப் என்று தனி அமைப்பாக செயல்படுபவர்கள் ஆம் ஆத்மி அரசியலைத் தான் பேசுகிறார்கள்”
jnu-ground-report-4-4ஜே.என்.யு வளாகத்தில் பல்வேறு அரசியல் அமைப்புகளின் மாணவர் பிரிவுகள் செயல்பட்டாலும் அப்பல்கலைக்கழகத்தின் அரசியல் சூழலில் இடதுசாரி மற்றும் தலித் ஆதரவுக் குரல்களே செல்வாக்கோடு ஒலிக்கின்றன. சி.பி.எம்(எம்.எல்) லிபரேசன் கட்சியின் அனைத்திந்திய மாணவர் அமைப்பு (AISA) பிரதானமான அமைப்பாக இருக்கிறது. சி.பி,.எம் கட்சியின் இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), சி.பி.ஐ கட்சியின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) போன்றவற்றுக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. இவை தவிர மாவோயிச கொள்கைகளைப் பேசும் (மாவோயிஸ்ட் கட்சி சார்பற்ற) ஜனநாயக மாணவர் சங்கம் (DSU) மற்றும் காங்கிரசின் இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) போன்றவற்றுக்கும் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.
இந்த அமைப்புகளைத் தவிர, மேற்குவங்க மாணவர்களால் நடத்தப்படும் Collective, பின்நவீன சித்தாந்தம் கொண்ட KNS, அம்பேத்கரிய BAPSA, உள்ளிட்ட அமைப்புகளுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஆதரவுத் தளம் உள்ளது. இவற்றோடு புதிய பொருள்முதல்வாதிகள் (TNM) என்கிற அமைப்பு எண்ணிக்கையில் குறைவானவர்களைக் கொண்டிருந்தாலும், கருத்துத் தளத்தில் குறிப்பிடும்படியான அமைப்பாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான ஏ.பி.வி.பி அமைப்பிற்கு குறிப்பிட்ட சில கல்லூரிகளில் ஆதரவுத் தளம் உள்ளது. சுமார் முன்னூறு மாணவர்கள் வரை அவ்வமைப்பின் ஆதரவாளர்களாக உள்ளனர்.
இவை தவிர இஸ்லாமிய மாணவர் சங்கம் (SIO) மற்றும் பாபுலர் பிரண்ட் அமைப்பின் மாணவர் பிரிவான CFI போன்ற வகாபிய அடிப்படைவாத மாணவர் அமைப்புகளுக்கும் ஓரிரு பிரதிநிகள் உள்ளனர். இஸ்லாமிய மாணவர்கள் பெரும்பான்மையாக இடதுசாரி மாணவர் அமைப்புகளிலேயே உள்ளனர். வகாபிய கருத்துக்களுக்கு வளாகத்தில் அனேகமாக இடமில்லை என்றே சொல்லலாம்.
மாணவர் அமைப்புகள் பங்கு கொள்ளும் மாணவர் சங்கத் தேர்தல் சுமார் ஒரு மாத கால திருவிழாவைப் போன்றே நடத்தப்படுகின்றது. தேர்தலுக்கு முன் அதைக் கண்காணித்து முறைப்படுத்த மாணவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தேர்தல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டு அது நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றது. வளாகத்தினுள் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனி கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கவுன்சிலர்களோடு சேர்த்து தலைவர், துணைத்தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
தேர்தல் முறையைப் பொறுத்தளவில், லிங்டோ குழு பரிந்துரைத்த மாணவர் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு பல்வேறு மாணவர் அமைப்புகளிடம் எதிர்ப்பு நிலவுகின்றது. தேர்தலில் பங்கேற்க வயது வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும், மொத்த தேர்தல் நடைமுறையை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் உள்நோக்கங்களையும் லிங்டோ குழு பரிந்துரைகள் கொண்டிருப்பதால், புதிய பொருள்முதல்வாதிகள் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் மாணவர் சங்கத் தேர்தலில் பழைய முறையைக் கொண்டு வரக் கோரி தேர்தலைப் புறக்கணித்து வருகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிகள் அடங்கிய பொதுக்குழு (General Body Meeting) ஒவ்வொரு கல்லூரிவாரியாக அவ்வப் போது கூடி மாணவர்களின் தேவைகள், கோரிக்கைகள் ஆகியவற்றைப் பரிசீலிக்கிறது. வருடாந்திரம் நடக்கும் தேர்தலில் கல்லூரிகளுக்கான பிரதிநிதிகளோடு சேர்த்து பல்கலைக்கழக அளவிலான கவுன்சிலர்கள், தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாணவரும் இந்தப் பதவிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வக்களிக்க வேண்டும். ஒரு கல்லூரியின் மொத்த மாணவர் எண்ணிக்கையை பொருத்து ஒன்றுக்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு மாணவரும் தேர்தலின் போது ஏறக்குறைய பத்து வெவ்வேறு பதவிகளுக்கான வாக்குகளைத் தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறாக ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்படும் மாணவர் சங்கம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்குமான ஒரு ஊடகமாக செயல்படுகின்றது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின் ஜோசியத்தையும் யோகாவையும் ஒரு பாடமாக உள்ளே நுழைக்க முயற்சித்ததை மாணவர் சங்கமே முன்னின்று முறியடித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாணவர் சங்கம் ஒரு தீர்மானகரமான குரலாக விளங்குவதன் காரணமாகவே இந்துத்துவ செயல்திட்டங்களை எதிர்ப்பின்றி உள்ளே புகுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்கள் தோல்வியடைகின்றன.
jnu-ground-report-4-3ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிவருடிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் ஜே.என்.யுவிற்கு எதிராக முன்னெடுத்து வரும் நச்சுப் பிரச்சாரங்களுக்கு கலாச்சார தளத்தில் நோக்கங்கள் உள்ளதென்றால், மத்திய பாரதிய ஜனதா அரசுக்கோ பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்குவது, உதவித் தொகையை நிறுத்துவது உள்ளிட்ட மறுகாலனியாக்க திட்டங்களை இடதுசாரி மாணவர் அமைப்புகள் போர்க்குணத்தோடு எதிர்த்து நிற்பது கண்ணில் ஊசியைப் பாய்ச்சுவதாக உள்ளது.
”தோழர், இத்தனை அமைப்புகளும் மாறுபட்ட கண்ணோட்டங்களும் உள்ள இடத்தில் ஒரு பிரச்சினைக்கான விவாதம் என்றால் தலையைக் கிறுகிறுக்க வைக்கும் அனுபவமாக அல்லவா இருக்கும்?”
”விவாதங்கள் நீண்ட நேரம் நடக்கும்… இங்கே நிலவும் விவாதச் சூழல் பலரும் நினைப்பது போல் முற்றிலுமாக இடதுசாரி சாய்வோடு நடக்கும் ஒன்றல்ல. ஒருவகையான லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படையிலான விவாதங்களே இங்கே நடக்கின்றன. அதில் எல்லா கருத்துக்களுக்கும் இடமுண்டு. எல்லா வர்க்க சார்புள்ள கருத்துக்களும் மோதும் ஒரு விவாத வெளியில் இறுதியாக இடதுசாரிக் கருத்துக்கள் வெல்கின்றன என்பதே உண்மை..”
“உதாரணம் ஏதாவது சொல்லுங்களேன்…”
“ஏதாவது ஒரு விசயம் பற்றி முடிவெடுக்க அனைத்து மாணவர் சங்க அமைப்புகளும் கூடுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்… அப்போது காங்கிரசு கட்சியின் மாணவர் அமைப்பு தனது கட்சியின் நிலைப்பாடுகளுக்கு பொருத்தமான கருத்துக்களை முன்வைத்து வாதாடும்… அதே போல் ஏ.பி.வி.பி அமைப்பினர் தனது இந்துத்துவ கருத்தியலுக்கு பொருத்தமான வாதங்களை முன்வைப்பார்கள்.. யாரும் இவர்களுக்குத் தடை போட மாட்டார்கள்.. அவர்களின் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதை தீவிர இடதுசாரி கருத்தியல் கொண்ட சங்கங்கள் கூட ஆதரிப்பார்கள். அனைத்துமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். விவாதத்தின் போக்கில் இந்துத்துவர்களால் தங்களது வாதங்களை தற்காத்துக் கொள்ள முடியாமல் தோற்றுப் போவார்கள். என்றாலும் கூட இடதுசாரி கருத்து கொண்டவர்கள் அவர்களை இழிவு படுத்தவோ, கேவலமாக பேசவோ செய்ய மாட்டார்கள். அவர்களுடையதும் ஒரு கருத்து தான் என்கிற அளவில் தான் எடுத்துக் கொள்வார்கள். ஜனநாயகப் பூர்வமான விவாதமே சரி தவறு எதுவென்பதை நிலைநாட்டும்”
DSU-naxalbariஇந்த ஜனநாயகம் தான் இந்துத்துவ கும்பலின் தலையாய பிரச்சினையாக உள்ளது. மாட்டுக்கறி வேண்டுமா வேண்டாமா? ராமன் தேசிய நாயகனா இல்லையா? மகிஷாசுரனை வணங்கும் உரிமை சரியா தவறா? காஷ்மீர் இந்தியாவோடு இருப்பதை நாம் தீர்மானிப்பதா காஷ்மீரிகளே தீர்மானிப்பதா? போன்ற எதிரெதிரான நிலைப்பாடுகளில், கருத்து மோதல்களில், இந்துத்துவம் விவாதத்தைக் கண்டு அஞ்சுவது ஏன் என்பதை விளக்கத் தேவையில்லை. இது போன்ற விவாதங்களில் முன்வைக்கப்படும் இந்துத்துவத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைத்தான் அவர்கள் தேச விரோதம் என்பதாக சித்தரிக்கின்றனர்.
வளாகத்தில் நிலவும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் லிபரல் ஜனநாயகத்தின் சூழலை இந்துத்துவ கும்பலால் எதிர் கொள்ளவே முடியவில்லை. ராமனோ கோமாதாவோ… அவர்கள் புனிதம் என்று கருதுவதை ஏன் புனிதம் என்று நிலைநாட்டுவதற்கு அவர்கள் கருத்து மோதலை எதிர்கொண்டாக வேண்டும்.
குழந்தைத் திருமணம், விதவைகளைத் தீயில் தூக்கி எறியும் சதி முறை, தேவதாசி முறை, போன்றவை முன்பொரு காலத்தில் சமூகத்தின் பொதுபுத்தியில் “சரி” என்பதாக நிலைநாட்டப்பட்டிருந்தன. புதிய சமூகத்தின் கருத்துக்கள்தாம் பழையனவற்றைத் தவறென நிறுவி புதிய நியதிகளை நிலைநாட்டியுள்ளன.
ஒரு வேளை விதவைகளை உயிரோடு கொளுத்தும் உடன்கட்டை ஏறும் முறையை எதிர்த்து முறியடித்த ராம் மோகன் ராயின் காலத்தில், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால், ராம் மோகன் ராயை தேச துரோகியென அறிவித்திருப்பார்கள்.
விவாதம் எதைப் பற்றியதாக இருந்தாலும் அந்த விவாதப் பொருள் குறித்து ஆதரவாகவோ எதிராகவோ அல்லது முற்றிலும் வேறு நிலையிலிருந்தோ கருத்தை வைத்து வாதாடலாம் என்பதுதான் ஜே.என்.யு வில் நிலவும் விவாதக் கலாச்சாரம். தேசம் என்பது விவாதப் பொருள் என்றால், அதன் மேலான ’பக்தி’ மட்டுமல்ல – அந்த வழிபாட்டு மூடத்தனத்திற்கு எதிரான கருத்துக்களும் கூட முன்வைக்கப் படும். இதில் எது சரி என்பதை விவாதமே முடிவு செய்யும். ஆனால், விவாதங்களில் மாற்றுத் தரப்பால் சொல்லப்படும் கருத்துக்களை கத்தரித்து எடுத்து வந்து விஜயகாந்த் ரசிகரிடம் போட்டுக் காட்டுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
ஐ.எஸ்.ஐ.எஸ், தாலிபான் போன்றவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலோ ஹிட்லரின் ஜெர்மனியிலோ எதிர்கருத்துக்களை எப்படி கையாண்டனரோ அப்படியே கையாள வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் விருப்பம். அல்லாவை மறுத்து வாதாடக் கூடாது, குரானை வார்த்தை பிசகாமல் தாங்கள் சொல்லும் விதமாக மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தாலிபான்கள் சொல்வதற்கும் – மாட்டுக்கறி, ராமன், சமஸ்கிருதம் உள்ளிட்டு தாங்கள் முன்வைக்கும் தேசிய அடையாளங்களை மற்றவர்கள் கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் – மறுப்பவர்கள் தேசத் துரோகியாக்கப்படுவார்கள் என்கிற இந்துத்துவ கும்பலின் அணுகுமுறைக்கும் எள் முனையளவுக்கும் வேறுபாடு இல்லை.
எனினும், ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சினை அந்த வளாகத்தில் நிலவும் கருத்து சுதந்திரம் மட்டுமில்லை. அதையும் தாண்டி பல்வேறு பரிமானங்களைக் கொண்ட வேறு நோக்கங்களும் உள்ளன. அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் சதித் திட்டங்களோடு இப்போது அவர்கள் களமிறங்கியுள்ளனர்.
(தொடரும்)
– வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை: