வியாழன், 17 மார்ச், 2016

பால் வியாபாரம் – 68 % கலப்படம்தான்! – பார்லிமெண்டில் தகவல்

edit milhaanthaireporter.com :ஒவ்வொரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக் கிறது.பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.பசும்பாலில் தயாரிக்கப் படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.


மேலும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு அக்குழந்தையின் அன்னையின் மூலம் அற்புதமான தாய்ப்பாலை உருவாகச் செய்து கலப்படமில்லாமல் அப்படியே 2 வருடங்கள் குழந்தைக்கு புகட்டச்சொல்லி சொல்கிறோம். ஆனால் இன்றைய தாய் மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினால் தன்னுடைய அழகு குறைந்து விடும் என நினைத்து புட்டிப்பால் புகட்ட ஆரம்பித்து விட்டனர். இதன் காரணத்தினாலும், மக்களுடைய பால் நுகர்வு அதிகரித் துள்ளதாலும், தேவைக்கு ஏற்ப வழங்கலில் தட்டுப்பாடு வந்ததால் தனியார் பால் பதனிடும் தொழிற் சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இதன் காரணத்தினால் கலப்படமும் அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் லேக்டோ மீட்டர் போட்டுப் பாலில் எவ்வளவு தண்ணீர் என்று சோதிப்பார்கள். தண்ணீர்ப்பாலில் யூரியா, ஸ்டார்ச், மைதா மாவு, குளுக்கோஸ் கலந்து சோதித்தால் தண்ணீர் கலந்ததைக் கண்டுபிடிக்க முடியாது. சாதாரணமாக சைக்கிள் – டூவீலரில் கறந்த பால் என்று விற்பவர்கள் மேற்கொள்ளும் கலப்படம் இது.பிளாட்டிங் பேப்பரைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. இப்படி சில்லறையாகப் பால் வாங்காமல் பாக்கெட் பால் வாங்கினால் மட்டும் சுத்தமா என்ன? அங்கும் கலப்படம் உண்டு. மாடுகளின் காம்பிலிருந்து பீய்ச்சப்படும் கறந்த பால் சாதாரண மாக 7, 8 மணி நேரம் வரை தாங்கும். அதற்குள் விநியோகமாக வேண்டும். 8 மணி நேரத்துக்குப் பிறகு அது திரிந்துவிடும்.
அமுல், ஆவின் போன்ற நம்பிக்கையான பால் நிறுவனங்கள் கறந்த பாலைக் கொள்முதல் செய்து அது கெட்டுப் போவதற்கு முன்பே கொதிகலனில் காய்ச்சிய உடன் குளிரூட்டிப் பின் நிலைப்படுத்தப்பட்டு (அனுமதிக்கப்பட்ட கலப்படம்) பாக்கெட்டில் நிரப்பி விற்கின்றன. இது “”பாஸ்சரைஸ்டு மில்க்” என்று அழைக்கப்படுகிறது. காய்ச்சிக் குளிரூட்டப்பட்ட பால் என்றும் கூறலாம்.சாதாரணமாக இதைத்தான் பெரும்பான்மையான மக்கள் வாங்கிப் பயன் படுத்துகின்றனர். ராஜா பால், ராணி பால், அந்தப்பால், இந்தப்பால், சக்தி பால் என்று ஏராளமான பெயர்களில் பால் பாக்கெட்டுகள் – வெற்றிலை பாக்குக் கடைகளில்கூட விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில்தான் பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளித்து பேசுகையில் பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
அதாவது, “நாட்டில் அன்றாடம் வினியோகிக்கப்படும் பால் குறித்து உணவுப் பொருள் ஒழுங்குமுறை அமைப்பினர் நடத்திய ஆய்வில் 68 சதவீத பால் தரமானதாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. தவிர, பாலில் உடலுக்கு கேடு விளைவிக்கும் சோப்புத் தூள், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன.தற்போதுள்ள நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் 40 வினாடிகளில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதையும், எந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்பதையும் துல்லியமாக கண்டுபிடித்து விடலாம்.
ஒவ்வொரு எம்.பி.யும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நவீன ஸ்கேனர்களை வாங்கிக் கொள்ளலாம். ஸ்கேனர் விலை அதிகமாக இருந்தாலும் கூட ஒருமுறை சோதனை நடத்த 10 பைசாதான் செலவாகும். விரைவில் ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் பால் எங்கிருந்து வினியோகம் செய்யப்படுகிறது, கேன்களில் அடைக்கப்பட்ட பாலில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை கண்டறியும் முறை அமலுக்கு வரும் “என்று அவர் கூறினார்.
யூரியா போன்ற ரசாயனம் சேர்த்த பாலை அருந்தினால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை ஏற்படும்.தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.ஆகவே, வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கண்ட கண்ட பாக்கட் பாலை வாங்க வேண்டாம்.
இதனிடையே பாலில் உள்ள கலப்படத்தை நாமே வீடுகளில் சிறிய சோதனைகள் மூலம் கண்டறியலாம் தெரியுமோ?கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது?
தண்ணீர்
ஒரு வழுவழுப்பான சாய்வான ஓட்டின்(டைல்ஸ்) மீது ஒரு துளி பாலை விடும்போது பால் மெதுவாக கீழ்நோக்கி ஓடும்.அப்போது தான் ஓடிய பாதையில் தனது வெண்மை நிறத்தை கோடாக விட்டுச் சென்றால் அந்த பால் சுத்தமான தண்ணீர் கலக்காத பாலாகும். அவ்வாறில்லாமல் தனது பாதையில் வேகமாக ஓடி வெண்மை கோட்டை விட்டுச் செல்லாத பால் தண்ணீர் கலந்த கலப்படப் பாலாகும்.
மாவு
சிறிதளவுப் பாலில் சில துளிகள் டின்ச்சா; அயோடின் அல்லது அயோடினைச் சேர்க்கும்போது பாலின் நிறம் நீலநிறமாக மாறினால் அது ஸ்டார்ச்(மாவுப்பொருள்) சேர்க்கப்பட்ட கலப்படமான பாலாகும்.
யூரியா:
1) ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி பாலில் அரை தேக்கரண்டி சோயாபீன் தூளைச் சேர்த்து நன்கு குலுக்கி 5 நிமிடங்கள் கழித்து அதில் சிவப்பு லிட்மஸ் தாளை அரை நிமிடம் வைக்கும்போது சிவப்பு லிட்மஸ் தாள் நீலநிறத்திற்கு மாறினால் அந்தப்பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும்.
(SNF – மதிப்பை அதிகரிக்கச் செய்ய பாலில் யூரியா கலப்படம் செய்யப்படுகிறது)
2) ஒரு சோதனைக் குழாயில் 5 மிலி பாலில் 5 மிலி Paradimethylamino benzaldehyde (16 percent)-ஐச் சேர்த்தால் மஞ்சள் நிறம் தோன்றினால் அந்தப்பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும்.

கருத்துகள் இல்லை: