திங்கள், 14 மார்ச், 2016

மோடிக்கு ஒரு ராணுவ வீரரின் கடிதம்: கண்ணையாக்கள் JNU வில் மட்டும் இல்லை. படைகளிலும் உண்டு

edit mar 10ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் ‘வாழும் கலை’ நிகழ்ச்சி யமுனை நதிக்கரையில் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் பாலம் அமைக்கும் பணிக்கு இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இச்செய்தி கேட்டு ராணுவ வீரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு :
மதிப்பிற்குரிய பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடிஜிக்கு, எல்லையில் இருந்து இக்கடிதம் எழுதும் என்னை தேச துரோக வழக்கில் உள்ளே தள்ளி உதைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

ஜம்முவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெய் கிசான் ஜெய் ஜவான் என முழங்கிய மதிப்பிற்குரிய மோடி ஜி ஆட்சியிலும் என்னோடு ஒன்றாக உண்டு உறங்கி காவல் காத்த தர்மேந்தர் பாகிஸ்தானால் கொல்லப்படுகிறான். பசவப்பா எனும் ஆகச்சிறந்த வாலிபால் ப்ளேயர் இடுப்பில் சுடப்பட்டு கிடக்கிறான்.
அரசியல் மற்றும் அதானியின் பொருளாதார சூழ்நிலை பொருட்டு நட்பு பாராட்டலாம் தப்பில்லை என்றால் ஜெய் ஜவான் பிரச்சாரம் ஏன் என உள்மனது கேட்கிறது மோடி ஜி. போகட்டும், சாகத்தானே உடை தரித்தீர்கள் ஆயுதம் பெற்றீர்கள் என உங்கள் உள் மனது சொல்லலாம். ஆச்சர்யம் என்னவெனில் ரவி சங்கரின் ‘வாழும் கலை’ இந்திய ராணுவத்தில் எப்போது இணைந்தது என்பதுதான்.
“‘வாழும் கலை’ ரவிசங்கர் யமுனை நதியில் நடத்தும் நிகழ்ச்சிக்கு இந்திய ராணுவத்தினர் பாலம் போட பணிக்கப்பட்டுள்ள செய்தி பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு தனியார் நிறுவன ஆடம்பர நிகழ்ச்சிக்கு ஏன் இந்திய ராணுவத்தை பயன் படுத்த வேண்டும்?”
கழுத்தளவு நீரில் எல்லையோரம் காவலுக்கு சென்றவன் என்ற அடிப்படையில் கேட்கிறேன். பாலங்கள் யமுனை நதியில் தினவெடுத்து திரியும் ‘வாழும் கலை’ நிகழ்ச்சிக்கு அவசியமா இல்லை எல்லையிலா?
வாழும் கலை இருக்கட்டும் சாகும் கலையை விதர்பா முதல் இந்தியா முழுமைக்கும் எப்போது கற்று கொடுத்தீர் கள் மோடிஜி? நீங்கள் ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகமாகி உள்ளதாம் கவனீத்தீர் களா ஜி? யமுனையில்தான் அந்த நிகழ்ச்சி நடக்க வேண்டுமா என்ன? பரந்த பாலைவனம் நிறைந்த ராஜஸ்தானில் இல்லாத இடமா? வாழும் கலையை அந்த விரிந்த வெளியில் கற்று கொடுக்கலாமே மோடிஜி.
அத்தனை மன வலிமை இருக்கிறதா என்ன வாழும் கலை வல்லவர்களுக்கு?
இந்த பாலம் கட்டும் பணிக்கு ராணுவத்திற்கு பணம் கொடுத்ததாக சப்பை கட்டலாம். நீதிபதிகளின் உள்ளாடை துவைக்க அரசுப் பணியாளர், ஆபிசர்களின் சூ பாலிஸ் போட சிப்பாய்கள், வாழும் கலை ரவிசங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம், அதானிக்கு அக்ரிமென்ட் போட்டு கொடுக்க ஒரு பிரதமர், அற்ப விசயத்துக்கு ஐந்து முறை கடிதம் எழுதும் அமைச்சர், கார்பரேட் தியேட்டரில் பாட்டு பாடி ஆட்டம் போட காங்கிரஸைப் போலவே ஒரு கையாலாகாத அரசு…
வாரே வாவ்!!இளமையை, வாழ வேண்டிய வாழ்வை தொலைத்து கரைந்து நிற்கும் இராணுவத்தினரின் பெயரில் தேசபக்தி முகமூடியில் ஓட்டரசியல் செய்தது போதும் மோடிஜி. கண்ணையாக்கள் பல்கலைக்கழகங்களில் மட்டும் இல்லை. படைகளிலும் உண்டு. அவர்கள் கல்வியோடும் நாங்கள் ஆயுதங்களோடும் தனித்தனியே இருக்கிறோம்  aanthaireporter.com

கருத்துகள் இல்லை: