வெள்ளி, 18 மார்ச், 2016

பாரத் மாதா கி ஜே' கோஷம் போடாத சட்டமன்ற உறுப்பினர் இடைநீக்கம்

ஜனநாயகத்தில் திணிப்பு என்பது சட்டவிரோதமானது,அதனை ஏற்றுக் கொள்ள முடியாது' மகாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் யூசுப் பட்டான், `உயிரே போனாலும் பாரத் மாதா கி ஜே என்ற வாசகத்தை உச்சரிக்க மாட்டேன்' என்று கூறியதால் சட்டமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்திந்திய மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாட்டிற்கு அவமதிப்பு செய்துவிட்டதாக தெரிவித்தே அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிபிசிக்கு கருத்து தெரிவித்த தெரிவித்த வாரிஸ் யூசுப் பட்டான், `ஜனநாயகத்தில் திணிப்பு என்பது சட்டவிரோதமானது, அதனை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் பற்றி பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் மன்றத்தில் பயன்படுத்தத் தகுதி அற்ற வார்த்தைகளை தான் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.

எந்தத் தவறும் செய்யாத தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இதை தான் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
'எதிரில் அமர்ந்துக்கொண்டு 'பாரத் மாதா கி ஜே' என்று சொல்லு என்று வற்புறுத்துவதை எதற்காக ஏற்க வேண்டும், நீங்கள் வற்புறுத்துதலை தொடரும் பட்சத்தில் நான் அதை கூறவே மாட்டேன்' என்றார் அவர்.
'என் தேசத்தை நான் மிகவும் நேசிக்கின்றேன் என்றும் கூறிய அவர், இந்த மண்ணில் தான் பிறந்தேன், இதே மண்ணில் தான் இறப்பேன், ஒரே ஒரு கோஷத்தை வைத்து மட்டும் எனது தேசப்பற்றை சோதிப்பது சரியானதாக இருக்காது' என்றும் குறிப்பிட்டார்.
அனைத்திந்திய மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைசியும் கூட இரண்டு நாட்களுக்கு முன்பாக 'பாரத் மாதா கி ஜே' என்கிற கோஷத்திற்கு எதிரான கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்து மதத்தினரது கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை அனைத்திந்திய மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியினர் தொடர்ந்து வெளியிட்டு வருவதாக, இந்து மத ஆதரவு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் குற்றம் கூறிவருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் ஆதரவோடு வாரிஸ் யூசுப் பட்டான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. tamil.bbc.com

கருத்துகள் இல்லை: