திங்கள், 21 மார்ச், 2016

ஊரை அடிச்சு உலையில் போட்ட கும்பலின் வரலாறு மெதுவாக வெளியேவருகிறது

சென்னை: தேனி மாவட்ட அதிமுகவில் பிரபலமாக இருந்த தங்கத்தமிழ் செல்வனை ஓரம் கட்டிய பெருமை ஓ.பன்னீர் செல்வத்திற்கு உண்டு என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. சைலண்டாக இருந்து கொண்டே... தனது சகாக்கள் மூலம் காய் நகர்த்தி கட்சியில் தனது முட்டுக்கட்டையாக இருந்தவர்களை சத்தமில்லாமல் வீழ்த்தி விட்டார் ஓ.பன்னீர் செல்வம் என்பார்கள். அதிகார மையத்தில் ஜெயலலிதா மூலவராக இருந்தாலும் உற்சவராக வலம் வந்த சசிகலாவை ஓரம்கட்ட பார்த்ததன் விளைவையே இப்போது ஓ.பன்னீர் செல்வம் அனுபவித்து வருகிறார் என்கின்றனர். இப்போது அதிமுகவில் நடப்பது அதிகார மையத்தை கைப்பற்றுவது பெரியகுளம் குடும்பமா? மன்னார்குடி குடும்பமா என்ற போட்டிதான் என்கின்றனர் அருகில் இருந்து பார்த்தவர்கள். இரண்டு முறை முதல்வராக இருந்து பதவி சுகம் அனுபவித்து ருசி கண்ட ஓ.பன்னீர் செல்வம், கட்சியைக் கைப்பற்றி, நிரந்தர முதல்வராக வலம் வர நினைப்பதாக போட்டுக் கொடுக்கப்பட்டதால் இப்போது ஒதுக்கப்பட்டு வருகிறார்.
ஐவரணி நடவடிக்கைகள் அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை குழு என்ற பெயரில் இருந்த ஐவர் அணியினர் எடுத்த நடவடிக்கைகளால் மனம் நொந்து முடங்கி கிடந்த சீனியர்களை தேடிப் பிடித்து பதவி தர ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. தேனியில் ஒபிஎஸ் வளர்ச்சிக்குப் பின்னர் ஒரங்கட்டப்பட்ட தங்கத்தமிழ் செல்வனுக்கு தற்போது பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது நேரில் அழைத்து அவரை ஜெயலலிதா சந்தித்ததும், சில ஆலோசனைகளையும் கூறியதும் ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சி
ஓபிஎஸ் குருநாதர் ஐவர் குழுவின் தலைவரான ஓ.பன்னீர் செல்வத்தை மரியாதையாக ஓபிஎஸ் என்று அனைவரும் அளவுக்கு உருவாக்கிய குருநாதர் தங்கத்தமிழ் செல்வன்தான். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம், 'இவர் ரொம்ப நல்லவர்' என்று ஓபிஎஸ்சை அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான். இந்த அறிமுகம்தான் தேனி வந்த டிடிவி தினகரனுக்கு சகலமுமாக ஓபிஎஸ் மாற காரணமாக அமைந்தது.
அமைச்சரான ஓபிஎஸ் 2001ம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் எம்எல்ஏவாகி, அமைச்சராக காரணம் டிடிவி தினகரன்தான். ஜெயலலிதா முதல்வர் பதவி இழந்தபோது திடீரென ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. டிடிவி தினகரனை சசிகலா தற்காலிக முதல்வராக்க பார்த்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டதால் சசிகலா அதிர்ச்சியானார். முதல்வர் பதவி வழங்கப்பட்டதால் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்தார் ஓபிஎஸ். ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்கி அவரின் அசைக்க முடியாத சக்தியாகவும் திகழ தொடங்கினார்.
ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி.தினகரன்: ஒரு கட்டத்தில் தேனி தொகுதி எம்பியாக இருந்த டி.டி.வி.தினகரனுக்கும் கட்சியின் மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கும் இடையே டெல்லியில் வைத்து தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கறிஞர் மூலமாக இது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்புலத்தில் பன்னீர்செல்வம் இருந்தார். இதையடுத்து டி.டி.வி.தினகரன் ஓரம் கட்டப்பட்டார். மேலும் தனக்கு எதிராக இருந்த, சசிகலாவின் தீவிர ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வனையும் பன்னீர் செல்வம் காலி செய்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்ததால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சியில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. நிதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இதனால், ஜெயலலிதாவின் அடுத்த நிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் உயர்ந்தார்.
2வது முறையாக முதல்வர்: ஓ.பன்னீர் செல்வத்தை 2வது முறையாக முதல்வர் ஆக்கியது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தால் சசிகலாவை, பன்னீர் செல்வம் ஓரம் கட்டினார். தினகரனை முதல்வர் ஆக்க முயற்சியில் ஈடுபட்டதால் 2011ம் ஆண்டு சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டார். சசிகலாவிடம் எதுவும் பேசாமல் ஜெயலலிதாவிடம் நேரடியாக பேச ஆரம்பித்த தோடு சசிகலாவை ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து புறக்கணிக்க ஆரம்பித்தார். மேலும், தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களை, தனது ஆதரவாளர்களை கட்சியில் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தினார். கட்சியில் தனக்கு என்று ஒரு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி கொண்டதாகவும் புகார் எழுந்தது. இந் நிலையில் ஓபிஎஸ் குறித்து உளவுத்துறை ரிப்போர்ட்கள் வேறு மாதிரியாக வர ஆரம்பிக்கவே கட்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக செயல்பட்ட அனைவரையும் நீக்கி ஆட்டம் காண வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
தேர்தல் பணிக்குழு அதேபோல், தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்குழுவுக்கு கட்சியில் இருக்கும் சீனியர்களை நியமிக்கும் வேலையும் வேகம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. வேட்பாளர் பெயரை அறிவிக்கும் முன்னரே தேர்தல் பணிக்குழு லிஸ்ட்டை வெளியிட நினைக்கும் தேனி, திண்டுக்கல் ஏரியாக்களில் பொறுப்பில் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கூண்டோடு மாற்றி அறிவிக்கும் வேலையை செய்து வருகிறார்.
அங்க அடிச்சா இங்க வலிக்கும் ஒபிஎஸ் மூலம் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் யார் யார் என்பதை சேகரித்து அவர்களை கட்சிக்குள் கொண்டு வர முடிவு செய்திருக்கிறாராம் ஜெயலலிதா. காரணம், இதுவரை கட்சிக்கு ஆகாதரவர்கள் என்று ஓபிஎஸ் ஒதுக்கி வைத்தவர்கள் எத்தனை பேர் என்ற லிஸ்டையும் தங்கத்தமிழ் செல்வனிடம் கேட்டிருக்கிறாராம் ஜெயலலிதா.
ராஜ்யசபா எம்.பி பதவி வருகிற ஜூன் மாதம் மனோஜ் பாண்டியன் மற்றும் ரபி பெர்னாட் (அதிமுக) உள்ளிட்ட ஆறு ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதில் தங்கத்தமிழ் செல்வனுக்கு ஒரு இடம் தர ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

Read more at: tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: