வெள்ளி, 25 மார்ச், 2016

சீமான் :தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்...திருச்சி,சென்னை,கோவை,மதுரை, கன்னியாகுமரி ஆகியன முறையே....

சென்னை,மார்ச் 24 (டி.என்.எஸ்) தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆட்சி செயற்பாட்டு வரைவு' என்ற பெயரில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு பேசியதாவது:
தமிழகத்தின் தலைநகரமானது செயல்பாட்டு வசதிக்காக திருச்சிக்கு மாற்றப்படும்; சென்னையானது திரைக்கலை, துறைமுகம், கணினிநுட்பத் தலைநகராக இருக்கும்; தொழில், வர்த்தகத் தலைநகராக கோவை விளங்கும்; மொழி, கலை, பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும் தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் இருக்கும்.

நீர்வளப் பெருக்கம், தூய இலவசக் குடிநீர், கல்வி, மருத்துவ அடிப்படை உரிமை, மாற்று மின்உற்பத்தி, பத்தாண்டு பசுமைத்திட்டம், ஊழல்- லஞ்சம் ஒழிப்பு, மது புகையிலை ஒழிப்பு, கனிம வள பாதுகாப்பு, ஈழத்தமிழ் உறவுகளுக்கான தீர்வு, உழவர், மீனவர் நலன் மேம்பாடு, அயலக தமிழருக்கான அமைச்சகம், தொல் தமிழர் மீட்சி, தமிழின ஒருங்கிணைப்பு முன்னேற்றம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்மூலம், அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரிப்போம்.
தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி இணைந்ததால் தமிழனுக்கு எந்த மாற்றமும், பயனும் நிகழப்போவதில்லை. நாங்கள் போட்டியாக கொள்வது அதிமுகவை மட்டும்தான்.
இவ்வாறு சீமான் பேசினார்.   //tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: