புதன், 23 மார்ச், 2016

விஜயகாந்த்-தர்மர், நான்-அர்ஜூனன், திருமா-பீமர், ஜி.ரா-நகுலன், முத்தரசன்-சகாதேவன்... வைகோ ஒப்புதல் வாக்கு!

சென்னை: நாங்கள் பஞ்சபாண்டவர்கள். விஜயகாந்த் - தர்மர், நான் அர்ஜூனன், திருமாவளவன் - பீமர், ஜி.ராமகிருஷ்ணன் - நகுலன், முத்தரசன் - சகாதேவன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நானும் திருமாவளவனும் யாரையும் விஜயகாந்திடம் நெருங்க விடமாட்டோம். ( என்னங்க வீட்டுக்காவலில் வச்சுடுவீங்களோ? இப்படிதான் அம்மாவின் அல்லக்கைகளும் பண்ணிச்சு)  அரண் போல காப்போம் என்றும் வைகோ கூறியுள்ளார்.  சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் தமிழக முதல்வாராவது உறுதி என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தேர்தலில் ம.ந.கூ - தேமுதிக மகத்தான வெற்றி பெறும்; விஜயகாந்த் முதல்வராவார் என நம்பிக்கை தெரிவித்தனர். வைகோவின் பேச்சு வழக்கமான உணர்ச்சி வசப்பட்ட பேச்சாக இல்லாமல் கூடுதல் உற்சாகமாகவே இருந்தது. பகத்சிங்கில் ஆரம்பித்து பஞ்சபாண்டவர்வரை சென்றது அவரது பேச்சு. மூச்சுக்கு மூச்சு கேப்டன் விஜயகாந்த் என்றார் வைகோ. விஜயகாந்த் - தர்மன், வைகோ அர்ஜூனன், திருமாவளவன் - பீமன், ஜி.ராமகிருஷ்ணன் - நகுலன், முத்தரசன் - சகாதேவன் என்று கூறினார். தர்மருக்கு இரு பக்கமும் அர்ஜூனனாகிய நானும் பீமனாகிய திருமாவும் அமர்ந்து இருக்கிறோம். நகுலன், சகாதேவனாக தோழர்கள் ஜி.ராமகிருஷ்ணனும், முத்தரசனும் அமர்ந்திருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்திடம் யாரையும் நெருங்க விடமாட்டோம். எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக்கொள்வோம். எங்கள் கூட்டணி அமைந்த உடன் 5 கட்சித் தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். எதிர் முகாமில் இருப்பவர்கள்தான் கிலி பிடித்துப் போய் இருக்கிறார்கள் என்றார் வைகோ. திராவிடர் இயக்கப் பாரம்பரியத்தில் வந்ததாக வைகோ சொல்லிக் கொள்கிறார், அம்பேத்கர் வழிவந்த திருமா, இந்துத்துவ எதிர்ப்பாளர்களாக தங்களைச் சொல்லிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள். இவர்கள் தங்களை தாங்களே அழைத்துக் கொள்ள மகாபாரதக் கதாபாத்திரங்கள்தான் கிடைத்ததா? என்று ஒரு பெரியாரிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார். இதே சென்டிமெண்டிற்குள் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட்களையும் இழுத்து வந்து விட்டார் விஜயகாந்த் என்றும் பேசிக்கொள்கின்றனர்.

Read more at:/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: