சனி, 17 ஜனவரி, 2015

பெருமாள் முருகனுக்குத் துணையாக திமுக நிற்கும்: மு.க.ஸ்டாலின்

எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு ஆதரவாக திமுக துணை நிற்கும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: எழுத்தாளர் பெருமாள்முருகனை குறி வைத்து நடத்தப்படும் சகிப்புத் தன்மையற்றவர்களின் தாக்குதல்களும், போராட்டங்களும் அடிப்படைவாதிகளால் ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இவர்களுடைய ஒரே நோக்கம் அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குவது மட்டுமே. நாகரிகத்தின் உணர்வுகளையும், இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் பண்புகளையும் மதிக்கும் சகிப்புத் தன்மை உடைய பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்.

மதம் பற்றியோ, சாதி பற்றியோ நடக்கும் ஆரோக்கியமான விவாதங்கள், மனம் திறந்த ஆய்வுகள் போன்றவற்றுக்கும் நாம் என்றுமே அஞ்சியது இல்லை. மற்றவர்களின் உணர்வுகளை எப்போதும் மதிக்கத் தெரிந்த நாம், அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் ஒற்றுமையுடனும் துணை நிற்கிறோம்.
கடவுள் மறுப்பு, ஹிந்து மதம், கிறித்தவ மதம், இஸ்லாம் போன்றவற்றின் பெயரில் நாம் வன்முறையிலும் ஈடுபடுவதில்லை. அப்படி வன்முறையில் ஈடுபடுவோருக்கு துணை போவதும் இல்லை. ஜனநாயக ரீதியான அமைப்புகள் மூலம் வழங்கப்படும் கருத்துகளையும், அதற்கு எதிர் கருத்துகளையும் நாம் ஆதரிக்கிறோம்.
4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட புத்தகத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடும் அதன் மக்களும், மதத்தின் பெயரால் நடக்கும் இந்த வன்முறைகளை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழக மக்களின் கருத்துச் சுதந்திரத்தைச் சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். மதச்சார்ப்பின்மையைப் போற்றும் ஜனநாயக பேரியக்கமான திமுக இது போன்ற மத அடிப்படைவாதத்துக்கு என்றும் எதிராக இருக்கும் என்றார் அவர். dinamani.com

கருத்துகள் இல்லை: