சனி, 11 அக்டோபர், 2014

குறையொன்றும் இல்லை ! இன்றைய வளர்ச்சியின் மறுபக்கத்தை வெளிப்படுத்தும் நல்ல படம் !

குறையொன்றுமில்லை - விமர்சனம்! வாழ வழியில்லாமல் விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கும் வேதனையான வேளையில், அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பணத்தையும் விற்பனையையும் நோக்கியே ஒரு சொகுசு கும்பல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை குறையொன்றுமில்லை படம் மூலமாக உணர்த்திய வகையில் இயக்குனர் கார்த்திக் பாராட்டுக்குறியவர்விசயாயிகளின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம் என்பதை அழுத்தமாக சொல்கிறது குறையொன்றுமில்லை. முதலாளிகள் மட்டுமே பொருட்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அதே பொருட்களை உற்பத்தி செய்கிறவன் வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துகொள்கிறான் என்ற உண்மையை துணிச்சலோடும் பதிவு செய்கிறது இந்தத் திரைப்படம்.


புதுமுக நடிகராக கிருஷ்ணா என்கிற கீதன் நவீன இளைஞனாக வலம் வருகிறார். ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்கிற அவர் விவசாயிகளின் நலனில் அதிகம் அக்கரை கொண்டவராக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற வகையில் பல சிந்தனைகளை எடுத்து வைக்கிறார். விவசாயிகளும் முதலாளிகள் ஆகலாம், அதற்கு சில பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என்று சொல்லி அதற்காக புராஜெக்டில் இறங்குகிறார் கீதன்.


ஒரு அலுவலகத்தில் ஒருவன் உருப்படியான யோசனைகளை சொன்னால், இன்னொருவனுக்கு வயிறு எரியனுமே... ஆம், கீதனின் யோசனைகளை மேலதிகாரி பாராட்ட... எதிர் தரப்பில் கீதனை மட்டம் தட்டும் வேலைகளையே செய்து வருகிறார்கள். அத்தனை தடைகளையும் தாண்டி, தான் நினைத்ததை சாதிக்கிறார் கீதன் என்பதே க்ளைமாக்ஸ். 

இதற்கிடையில் சுவாரஸ்யம் ததும்பும் காதல் காட்சிகளும் வந்து போகிறது. கீதனுடன் ஹரிதாவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மருத்துவர் கதாபாத்திரத்தில் வரும் ஹரிதா டென்ஷனான நேரத்தில், ஒரு ஆரஞ்சு பழத்தைக் கொடுத்து கீதன் குறும்புத்தனம் செய்யும் காட்சி ரசனை. கிருஷ்ணா கதாபாத்திரத்தை காட்சிக்கு காட்சி சுவாரஸ்யத்தைக் கூட்டி தன் முதல் படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நாயகன் கீதன். இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நிச்சயம். 


கார்ப்பரேட் முதலாளிகளின் பார்வை விவசாயிகளின் மேல் விழ வேண்டும் என்பதையும், அது விவசாயத்தை வாழவைக்கும் என்பதையும் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக். படமாக்கப்பட்டதில் சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும், திரைக்கதையின் ஓட்டம் நிறைவான அனுபவத்தையே கொடுக்கிறது. விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.

’நீங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் கிடையாதுனு அர்த்தம் இல்ல. நான் இப்ப பதில் சொன்னா உங்களுக்கு புரியாதுனு அர்த்தம்’ என்று ஹீரோயிஸத்தோடு கீதன் பேசும் அதிரடி வசனத்திற்கு கைதட்டல்கள் கிடைக்கும் என்பது உறுதி.

நரேஷ் அய்யரின் குரலில் ஒலிக்கும் ‘கண்களில் விழுந்தேனா...’ பாடல் செவிகளில் காதலை பொழிந்து இதயத்தை ஈரமாக்குகிறது. கமர்ஷியல் என்ற பெயரில் ஆபாசமில்லாமல், அசிங்கமான ஆட்டங்கள் இல்லாமல், நேர்மையான ஒரு படைப்பு ‘குறையொன்றுமில்லை’. 

குறையொன்றுமில்லை - நிறைவான சினிமா!  nakkheeran,in

கருத்துகள் இல்லை: