புதன், 8 அக்டோபர், 2014

கோச்சடையான்' கேளிக்கை வரி வசூல் !வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' திரைப்படத்துக்கு கேளிக்கை வரி வசூலித்த விவகாரத்தில் விசாரணை செய்து, குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த விவரம்: ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்தத் திரைப்படத்துக்கு தமிழக அரசின் உத்தரவை மீறி கேளிக்கை வரி வசூலித்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.ஜெ.சரவணன் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி "கோச்சடையான்' திரைப்படத்தை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரூ. 120 கட்டணம் செலுத்திப் பார்த்தேன். இந்தக் கட்டணம் கேளிக்கை வரியும் சேர்த்து வசூலிக்கப்படுவதாக அந்த டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சில நாள்களுக்கு பின்னர், அந்த திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்ததால் தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்திருப்பது தெரியவந்தது.
இருப்பினும் அந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து கேளிக்கை வரியுடன் சேர்த்து திரையரங்குகளில் கட்டணம் வசூலித்தது. திரைப்படக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய வணிகவரித் துறையும், அதை முறைப்படுத்தத் தவறிவிட்டது.
இது குறித்து நான், தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர், வணிகவரித்
துறை ஆணையர், வணிக வரித்துறை, பதிவுத்துறை முதன்மைச் செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியன், திருவல்லிக்கேணி காவல்நிலைய ஆய்வாளர் இந்தப் புகார் குறித்து விசாரணை செய்ய வேண்டும், விசாரணையில் குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கு குறித்த இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். dinamani.com

கருத்துகள் இல்லை: