திங்கள், 28 ஏப்ரல், 2014

மதவாத நாடானால் இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது: மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா!


ஸ்ரீநகர்: இந்தியா மதவாத சக்திகளுக்கு போய் மதவாத நாடாக மாறினால் ஜம்மு காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருபகுதியாக இருக்காது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியை ஏற்க மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று பேசுகிறார்கள்.. அவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.. அப்படி இந்தியா ஒரு மதவாத நாடாக மாறினால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்காது. மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா! அப்படி நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போடுகிறவர்கள் ஆற்றிலோ கடலிலோ குதித்து சாக வேண்டியதுதான். மதவாத சக்திகளிடம் இருந்து எங்களை காப்பாற்றி நாட்டை முன்னேற்றபாதைக்கு அழைத்துச் செல்ல கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். நாடு இந்த மக்களுக்கு சொந்தமானது அதை என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்யட்டும். தேசிய மாநாட்டுக் கட்சிக்காக நீங்கள் அளிக்கும் வாக்கு மோடி- மெகபூபா முப்தி கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பதாகும். அப்போதுதான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் மதவாத சக்திகள் நுழைவதை உங்களால் தடுக்க முடியும். தேசிய மாநாட்டுக் கட்சியால் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை பாதுகாக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு ஃபரூக் அப்துல்லா பேசினார். முன்னதாக அவர் பேசும் இடத்துக்கு அருகே வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

Read more at: http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: