புதன், 30 ஏப்ரல், 2014

தயாளு அம்மாள், கனிமொழி, ராசா உள்பட 19 பேர் மீது இன்று விசாரணை !

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா 19 பேருக்கு எதிராக மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை பரிசீலிக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகும் தேதியை நிர்ணயித்து அதற்கான சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான குற்றப்பத்திரிகையை கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி ஓ.பி. சைனியின் முன் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. அப்போது, "அமலாக்கத் துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக புதன்கிழமை (ஏப்ரல் 30) விசாரணை நடத்தப்படும்' என்று நீதிபதி சைனி கூறினார்.
2ஜி அலைக்கற்றை வழக்கை சிபிஐ நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்துவருகிறது. அதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்கும் ஆஜராகி வருகின்றனர். இந் நிலையில், அதே விவகாரத்துடன் தொடர்புடைய நிதி முறைகேடு வழக்கை தற்போது அமலாக்கத் துறை தொடர்ந்துள்ளது. ஆகவே, இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்களா அல்லது நீதிமன்ற அனுமதியுடன் இவ் வழக்கிலும் அவர்கள் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வார்களா என்பது புதன்கிழமை தெரியவரும்.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற நோக்குடன் தவறு செய்தல், ஊழல் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் இரு குற்றப்பத்திரிகைகள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் இறுதி கட்ட விசாரணை மே 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி, ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கே. கோயங்கா, ஆசிஃப் பல்வா, ராஜீவ் பி. அகர்வால், கரீம் மொரானி, சரத் குமார், தயாளு அம்மாள், பி. அமிர்தம் மற்றும் ஸ்வான் டெலிகாம் (தற்போது எடிசலாட் டிபி), குசேகான் ரியாலிட்டி (முன்பு குசேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ்), சினியுக் மீடியா என்டர்டெயின்மென்ட் (முன்பு சினியுக் ஃபிலிம்ஸ்), கலைஞர் டிவி, டைனாமிக்ஸ் ரியாலிட்டி, எவர்ஸ்மைல், கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி, கான்வுட் கன்ஸ்டிரக்ஷன் அன்ட் டெவலப்பர்ஸ், டிபி ரியாலிட்டி, நிஹார் கன்ஸ்டிரக்ஷன் ஆகிய 9 நிறுவனங்களுக்கு எதிராகவும் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 3-ஆவது பிரிவின்படி அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
குற்றப்பத்திரிகையில்..: "அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு ஆதாயமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ. 200 கோடி அளவுக்கு ராசா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளுக்கு லஞ்சமாக வழங்கியுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு விசாரணை தொடங்கியபோது அப் பணத்துக்கு கூடுதலாக வட்டி போட்டு, மொத்தம் ரூ. 223.44 கோடியை கலைஞர் டிவி நிர்வாகம் திருப்பிக் கொடுத்துள்ளது. அப் பணம் வங்கியில் செலுத்தி அதை சட்டப்பூர்வ பரிவர்த்தனையாக கலைஞர் டிவி கணக்குக் காட்டியுள்ளது. இவை அனைத்தும் சிபிஐ வழக்கிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அந்த மதிப்புக்கான சொத்தை 2011, ஆகஸ்ட் 30-ஆம் தேதி முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, மேற்கண்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன' என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.dinamani.com

கருத்துகள் இல்லை: