திங்கள், 8 ஏப்ரல், 2013

தமிழக தலைவர்கள் ஈழ அகதிகளுக்கு ஒரு சொம்புதானும் கொடுக்கவில்லை

Thinamaniதமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா சென்ற சில மாதங்களிலேயே தங்களுக்குக் குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால் வாழ்வு தேடித் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், இங்கே படித்துப் பட்டம் பெற்றாலும் கூட, இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வேலையும் கிடைப்பதில்லை, தனியார் அலுவலகங்களிலும் வேலை கிடைப்பதில்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 132 முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகளின் வாழ்க்கைச் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த அகதிகளுக்கு, மிகச் சிறிய அளவில் நிதியுதவியும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியனவும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமா?
தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இலங்கை அகதிகள் முகாம்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதும், சந்தேகத்துடன் பார்க்கப்படுவதுமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இலங்கை அகதிகளை, தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொண்ட தமிழக அரசியல் கட்சிகள், அவர்களது வாழ்வாதாரம் குறித்துப் பெரிதும் பேசியதில்லை என்பதும் நிலைமை மோசமானதற்கு இன்னொரு காரணம்.
மேலும், அகதிகளை வைத்து வருவாய்த்துறை அலுவலர்கள் கொழித்தனர் என்பது மற்றுமொரு கசப்பான உண்மை. இவர்களுக்கான நிதியுதவியில் கையாடல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் எத்தனை இலங்கை அகதிகள் இருக்கிறார்கள், முகாமைவிட்டு வெளியேறித் திரும்பாதவர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரம்கூட முறையாக இல்லாத நிலையில்தான் வருவாய்த்துறை இருக்கிறது.
ஒவ்வொரு அகதியும் முகாமில் உள்ள பதிவேட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் அவர் எங்கே சென்றிருந்தார் என்பதற்குச் சரியான விளக்கம் சொல்ல வேண்டும்.
இரண்டு நாள்களுக்கு மேலாக முகாமில் இல்லாமல் போனால் அவர் பெயர் நீக்கப்பட வேண்டும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
முகாமுக்குத் திரும்பாதவர் இலங்கை சென்றாரா, அல்லது வேறு மாநிலத்துக்குச் சென்றாரா, அல்லது வருவாய்த் துறைக்கு பல பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, குடும்ப அட்டை பெற்று இந்தியக் குடிமகன் போலவே மாறிவிட்டாரா என்பதைக் கண்டறிய வேண்டும்.
ஆனால், வருவாய்த் துறையும் காவல்துறையின் “கியூ’ பிராஞ்சும் இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரியவில்லை.
ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகளை நடுக்கடலில் இருந்து அழைத்து வந்து, இருபத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக, இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல், நாகையில் ஒரு மண்டபத்திலேயே தங்க வைத்திருக்கும் அரசு அதிகாரிகளின் நோக்கம் என்ன? இவர்களில் பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் 75 பேரை மட்டுமே நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர். மற்றவர்களை ஏன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரவில்லை?
காரணம், இவர்கள் தங்கள் முகாம்களைவிட்டு வெளியேறி பல நாள்களாகியும், இவர்களது பெயர் இன்னும் நீக்கப்படாமல் இருக்கக்கூடும். ஆகவே அதை சரி செய்வதற்காக நடவடிக்கையைத் தாமதப்படுத்துகிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இவர்களில் பலர் அகதிகள் அல்ல, இந்தியர்கள்தான் என்பதாகக்கூட இருக்கலாம்.
இலங்கை அகதிகள்’ என்ற போர்வையில் ஆஸ்ரேலியாவிலும், கனடாவிலும் தஞ்சம் அடைந்து பிறகு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முற்பட்டவர்களும் சரி, இந்தியாவில் சொந்தங்களும், சொத்துகளும் உள்ளவர்களாய், முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர்களும் சரி, தொழில்செய்து வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஏழை இலங்கை அகதிகள் மட்டும் சிறைக்கைதிகள் போல வாழும் நிலைமை எந்த வகையிலும் நியாயமற்றது.
அவர்களுக்கான நிதியுதவி, கல்வி, தொழில் ஆகியவற்றுக்கு இந்திய அரசு முன்னுரிமை தந்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்க வேண்டும். அல்லது முகாம்களைக் கலைத்துவிட்டு, முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும் வாழ்ந்துகொண்டிருக்கிற – பதிவு செய்திருக்கும் – இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தர வேண்டும்.
அதன்பிறகு மற்ற இந்தியர்களைப் போல தம் உழைப்பாலும் திறமையாலும் அவர்கள் வாழ்க்கை நடத்த நாம் வழிவகுக்க வேண்டும்.
வங்கதேச அகதிகளும், இலங்கை அகதிகளும் தொடர்ந்து இந்தியாவுக்குள் வந்து கொண்டே இருக்கிறார்கள். வங்கதேச அகதிகளில் பலர் அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக மாறி, இந்தியர்களிலிருந்து பிரித்தறிய முடியாதபடி கலந்துவிடுகின்றனர்.
இந்தியாவில் பணம் கொடுத்தால் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது சிரமம் அல்ல என்பதால், அந்த வாக்கு வங்கியை அசாம் மாநில அரசியல்வாதிகள் தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.
அதெல்லாம் போகட்டும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி, முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் பற்றிக் கவலைப்பட்டதுண்டா? குறைந்தபட்சம் ஏதாவது ஒரு அகதி முகாமுக்கு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் போனதுண்டா? போக மாட்டார்கள்.
காரணம், இலங்கை அகதிகள் வங்கதேச அகதிகள்போல இவர்களுக்கு வாக்கு வங்கிகளாகப் பயன்பட மாட்டார்கள். அவர்களால் இவர்களுக்கு அரசியல் ஆதாயமும் கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களில் விருப்பமுள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி விட்டு, இங்கேயே வாழ விரும்புகிறவர்களுக்கு, இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாத நிலையில், இந்தியக் குடியுரிமையேகூட அளித்துவிட நாம் பரிசீலிக்க வேண்டும்.
இனியும் தமிழகத்தில் அகதிகள் முகாம்கள் தேவையில்லை!

கருத்துகள் இல்லை: