ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

ராகுல் புண்ணியத்தில் மீண்டும் த.மா.கா உதயம் ?

ராகுல் காந்தி  மாநில அரசியலை எள்ளளவும் புரிந்து கொள்ளாமல் கடந்த தேர்தலில் திமுகவையும் அதன் தொண்டர் பலத்தையும் சற்றும் மதிக்காமல் செய்த அரசியலின் பெறுபேறுகளில் இருந்து  எந்த பாடமும் படிக்கவில்லை , கழகங்களின் தயவு அதன்  தொண்டர்களின் ஆதரவு இல்லாமல் காங்கிரசுக்கு இனி தமிழ்நாட்டில் மீட்சி இல்லை .இதை நன்றாக புரிந்து கொண்டவர்கள் ராகுலிடம் பேசவே பயப்படுவதாக தெரிகிறது .ஈழ அரசியலை சாக்காக வைத்து தமாகாவை உருவாக்க முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது வாழ்க
டில்லி மேலிடத்தின் பாரபட்ச நடவடிக்கை, இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் த.மா.கா.,:
அப்பிரச்னைகளை மையப்படுத்தி, காங்கிரஸ் கட்சியை, இரண்டாக உடைக்க, மத்திய அமைச்சர் வாசனும், அவருடைய ஆதரவாளர்களும் தயாராகியுள்ளனர் என்றும், லோக்சபா தேர்தலுக்கு, மூன்று மாதம் முன், மீண்டும், த.மா.கா., உதயமாகும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆறு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., "சீட்' பெறுவதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் துவக்கப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படுதோல்வி:
தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிலைப்படுத்தி, லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழர்களின், நல்வாழ்வு மீது, காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு, பிரதானமாக எழுந்துள்ளது. சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் அடைந்த படுதோல்வி, லோக்சபா தேர்தலிலும் தொடரும் என்ற பீதி, காங்கிரஸ் கட்சியினருக்கு உருவாகியுள்ளது.மத்திய அமைச்சர் வாசனின் தீவிர ஆதரவாளரான ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டாகியும், மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட, டில்லி மேலிடம், சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இரு முறை நடந்த, இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற யுவராஜா, "புதிய உறுப்பினர்களை சேர்க்கவில்லை. இணைய தளம் மூலம், உறுப்பினர்களை சேர்க்கவில்லை, கோஷ்டிகளை வளர்க்கிறார்' என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரது பதவி பறிக்கப்பட்டது.அவருக்கு, மீண்டும் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என, டில்லி மேலிட தலைவர்களிடம் வாசன் வலியுறுத்தியும், அவரது கோரிக்கை எடுபடவில்லை.


பலன் கிடைக்கவில்லை:
மூப்பனார் மறைவுக்கு பின், காங்கிரஸ் கட்சியுடன் த.மா.கா., இணைக்கப்பட்ட பின், வாசனுக்கு மட்டும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் அடைந்தாரே தவிர, அவரது ஆதரவாளர்களுக்கும், பெரும்பான்மையான தொண்டர்களுக்கும், எந்த பலனும் கிடைக்கவில்லை.தி.மு.க., கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கட்சி கழற்றி விடப்பட்டுள்ளதால், லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தனித்து போட்டியிட்டால், ஒரு "சீட்'டில் கூட, காங்கிரஸ் வெற்றி பெறாது என்ற பரவலான பேச்சும் வாசனை, தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்க வைத்துள்ளது.

சோவுடன் ஆலோசனை:


த.மா.கா., துவக்குவதற்கு பின்னணியில் செயல்பட்ட, "துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமியை, நான்கு முறை வாசன் சந்தித்து பேசியுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்னைக்கு, வாசன் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், அவரது அணிக்கு, தமிழக மக்களின் ஆதரவு கிடைக்கும் என, வாசன் நம்புகிறார். அதனால் தான், பிரதமர் மன்மோகன் சிங்கை, வாசன் சந்தித்து, இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்னையில், மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வாசன் வலியுறுத்தினார்.இலங்கை விளையாட்டு வீரர்கள், தமிழகத்திற்கு வரக்கூடாது என, முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக் கூடாது என, சட்டசபையில் தீர்மானம், மத்திய அரசின் மண்ணெண்ணெய் அளவு, தமிழகத்திற்கு குறைவாக தரப்படுகிறது என, முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு ஆகிய நடவடிக்கைகளை, வாசன் வரவேற்றுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்னைக்காக, இதுவரை சோனியாவை, ஏழு முறையும், ராகுலை, நான்கு முறையும், வாசன் சந்தித்து பேசியும், தன் கோரிக்கை நிறைவேறவில்லை என்ற ஆதங்கம், வாசனுக்கு நீறு பூத்த நெருப்பாக கனன்று வருகிறது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தே.மு.தி.க.,வுக்கு "செக்' :
லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றால், அ.தி.மு.க., அணியில், ம,தி.மு.க., இடம் பெறும். தே.மு.தி.க., ஓட்டு வங்கியை, ம.தி.மு.க., ஓட்டு வங்கி சமப்படுத்த முடியாது. எனவே, தமிழக காங்கிரசை, வாசன் தலைமையில் உடைக்கும் போது, நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள், ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் காமராஜர், மூப்பனார் மீது கொண்டுள்ள அபிமானிகளின் ஓட்டுக்கள், தமிழக இளைஞர் காங்கிரஸ், தமிழக மாணவர் காங்கிரசின், 80 சதவீதம் ஓட்டுக்கள், வாசன் அணிக்கு கிடைக்கும். எனவே தே.மு.தி.க., ஓட்டுக்களை சரிக்கட்ட, வாசன் அணி ஓட்டுக்கள் பயன்படும் என அ.தி.மு.க., கருதுகிறது.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: