சனி, 13 ஏப்ரல், 2013

காரால் அடித்துவிட்டு நிற்காமல் ஓடிய அதிமுக மந்திரி ! இளைஞர் மரணம்

அதிமுக அமைச்சரின் கார் மோதி இளைஞர் பலி! மந்திரியை தப்ப வைக்க வழக்கை மாற்றிய காவல்துறை!

    வாகைக்குளத்தில் சலூன் கடையில் வேலை பார்த்து வந்த உடன்குடி ஜே.ஜே.நகரைச் சேர்ந்த வயனப்பெருமாள் மகன் ராமர் (வயது 18).  முடிவைத்தானந்தல் என்ற ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி நெடுஞ்சாலையில் வாகைக்குளம் என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக, அசுர வேகத்தில் வந்த தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனின் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சுமார் 50 அடி தூரம் இழுத்துச் சென்று தூக்கி எறியப்பட்டார் ராமர். மோதிய அமைச்சரின் வாகனமும், வாகன அணிவகுப்பில் உடன் சென்ற வாகனங்களும் நிற்காமல் சென்று விட்டன. அங்குள்ள பொதுமக்கள் 108 அவசர உதவியை நாடியதில்,  ராமர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.&அமைச்சரின் எண்டவர் கார் மோதியதற்கு காவல்துறையினர், ஆழ்வார்திருநகரி ஒன்றியப் பெருந்தலைவர் விஜயகுமாருடைய ஸ்கார்பியோ வாகனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் என அப்பகுதியில் செய்தி பரவுகிறது. அமைச்சரின் வாகனங்களுடன் வந்த சேர்மேன் விஜயகுமார் வாகனம் டீசல் போடுவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஒதுங்கியது. டீசல் பிடித்துவிட்டு கிளம்பும்போது, அமைச்சரின் கான்வாய் வெகுதொலைவில் சென்றுவிட்டதால், அதை பிக்கப் செய்வதற்காக சேர்மேனின் வாகனம் அதிவிரைவாக சென்றதால், அப்போது சாலையை கடக்க முயன்ற ராமர் மீது வாகனம் மோதியது. அதில் விபத்து ஏற்பட்டு ராமர் மரணம் அடைந்தார் என்பதால், விஜயகுமார் வாகனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். -சி.என்.இராமகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: