புதன், 10 ஏப்ரல், 2013

வளம் தரும் பனையை அழிய விடலாமா?

tamilmurasu.org   மரங்களின் பலன் வார்த்தைகளால் அளக்க
முடியாதது. ஒவ்வொரு மரமும் தன் வாழ்நாள் முழுவதும் காய், கனி, மரக்கட்டை என பல விதங்களில் பயன்படுகிறது. எல்லா மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்க, பனை மரங்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மரங்களை சார்ந்துள்ள பனைநார் தொழில்களும் நலிந்து கிராம பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஉலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும்  தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை மரங்களை கைவிட்டு விட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.


இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. இவை உடலுக்கு குளிர்ச்சி. ஆனால் வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். மேலும் கண்மாய், ஏரி, புறம்போக்கு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அதிகரித்ததால் பனை மரங்கள் அழிந்து போய் விட்டன. கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவது தவறுதான். ஆனால் வேறு வழியில்லாததால் விவசாயிகள் இப்படி செய்கின்றனர்.

பனை பொருட்களுக்கு எப்போதுமே மக்களிடம் ஆர்வம் இருக்கிறது. அவற்றை பரவலாக கிடைக்கச் செய்தாலே விற்பனை அதிகரிக்கும். நல்லவிலை கிடைத்தால் கண்டிப்பாக இருக்கும் பனை மரங்களை காப்பாற்றவும் புதிதாக வளர்க்கவும் விவசாயிகள் முன்வருவார்கள். இல்லாவிட்டால் ஓவியத்தில் பார்த்துதான் பனை மரத்தை தெரிந்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டு விடும்.

கருத்துகள் இல்லை: