புதன், 3 ஏப்ரல், 2013

அமைதியாக ஓரங்கட்டப்பட்ட அத்வானி! ராஜ்நாத் சிங் - மோடி கூட்டணி

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் முகங்களாக அறியப்பட்டவர்கள் வாஜ்பாயும் எல்.கே. அத்வானியும்தான்!வாஜ்பாய் தீவிர அரசியலைவிட்டே ஒதுங்கிவிட்டார். எல்.கே.அத்வானியோ தற்போது அமைதியாக ஒதுக்கப்பட்டுவிட்டார் என்றே கூறலாம்.பாஜகவின் தலைவராக நிதின் கத்காரியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நியமித்தது. ஆனால் கத்காரியுடன் மல்லுக்கு நின்று கொண்டிருந்தார் அத்வானி. நிதின் கத்காரிக்கு எதிராக பிரச்சாரத்துக்கு தூபம் போடக் கூடியவராகவே அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பார்த்து வந்தது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் நிறுவனர் ஜின்னாவை ஒரு மதச்சார்பற்றவர் என்று அத்வானி கூறிய நாள் முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் அவருக்குமான விரிசல் கத்காரி விவகாரத்தில் விரிவடைந்தது எனலாம்.
அத்வானி விரும்பியது போலவே கத்காரி வெளியேற்றப்பட்டார். ஆனால் ராஜ்நாத்சிங்கின் நியமனம் தம்மை ஓரங்கட்ட வைத்துவிடும் என்று அத்வானி நினைத்திருப்பாரா எனத் தெரியவில்லை.பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்ட் குழுவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இடம்பெறப் போகிறார் என்ற செய்தி முன்கூட்டியே வெளியாகிவிட்டது. அதே நேரத்தில் பாஜக ஆளும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகானையும் இக்குழுவில் இடம்பெற வைக்க அத்வானி போராடிப் பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. அத்துடன் தர்மேந்திர பிரதான் மற்றும் ஜேபி நத்தா ஆகியோரை பொதுச்செயலர்களாக நியமிக்கவும் அத்வானி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.அதாவது பாரதிய ஜனதா கட்சியில் முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் கொண்டவராக அத்வானி இருந்த காலத்தை அமைதியாக மலையேற்றிவிட்டார் ராஜ்நாத்சிங் என்றுதான் கூறப்படுகிறது. தாங்கள் விரும்பியபடி ஒரு பட்டியலைத் தயாரித்து ஒப்புக்காக அத்வானியிடம் காட்டிவிட்டு தமது 'கடமை'யை செவ்வனே செய்து முடித்து அமைதியாக அத்வானியை ஓரங்கட்டிவிட்டனர் என்றே கூறப்படுகிறது.ராஜ்நாத் சிங் தரப்போ, தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் புதிய நியமனங்களில் 60 வயதுக்கு கீழே இருப்பவர்கள் 76 பேர் என்று சொல்லுகின்றனர். இந்த லாஜிக்கை சொல்வதற்குக் காரணமே 85வயதாகிவிட்ட அத்வானிக்கு இனி அப்படி ஒன்றும் அதிகாரம் தேவை இல்லை.. ஒதுங்கிக் கொள்வதே நல்லது என்று சொல்லாமல் சொல்வதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.அத்வானியை ஓரங்கட்டி ராஜ்நாத் சிங் விரும்பியபடி நியமனங்கள் முடிந்த கையோடு மோடியை முன்னிறுத்தும் படலங்கள் இனி தொடங்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. முதல் கட்டமாக கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு அறிவிக்கப்பட இருக்கிற பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடிதான் தலைவராக இருக்கலாம் என்கின்றன பாஜக வட்டாரங்கள். அப்புறம் என்ன பாஜக தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவது மட்டுமே பாக்கி.. இதனால் மோடி ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்!

கருத்துகள் இல்லை: