வியாழன், 4 ஏப்ரல், 2013

மோடிக்கு வந்தது சிக்கல்: ரூ17,000 கோடி நிதி இழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு!

பா.ஜ.க.-வின் அடுத்த பிரதமர் வேட்பாளராக அடையாளம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்வாக திறமைமீது, வந்துள்ளது ஒரு குற்றச்சாட்டு. குஜராத்தில் பெரிய நிறுவனங்களுக்கு சலுகை அளித்ததால், குஜராத்துக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தங்களை செய்துகொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை தூக்கிப் பிடிக்கப் போகிறது காங்கிரஸ் கட்சி!
குஜராத் சட்டசபையில் தலைமை கணக்கு தணிக்கையர் (சி.ஏ.ஜி.) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன.
மாநில அரசுக்கு சொந்தமான குஜராத் மாநில பெட்ரோநெட் லிமிடெட்டுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டது. பருச் மாவட்டத்தில் உள்ள பத்புட் என்ற இடத்திலிருந்து எரிவாயுவை (கியாஸ்) ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு குழாய் வழியாக எடுத்துச் செல்ல இந்த உடன்படிக்கை வழி செய்தது.

ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயுவை எடுத்துச் சென்றபோது, ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை மீறி ஒற்றை கட்டண வீதத்தின்படி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதற்கு குஜராத் மாநில பெட்ரோநெட் லிமிடெட்தான் பொறுப்பு.
மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம், அதானி பவர் லிமிடெட்டுடன் செய்து கொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் விதி முறைகள் மீறப்பட்டுள்ளது. இதில் மின்சாரம் சப்ளை செய்யப்படாததால், உரிய அபராதம் விதிக்கப்படவில்லை. இதன் மூலம் அதானி பவர் லிமிடெட் ரூ.160.26 கோடி பலன் பெற்றுள்ளது.
சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் செய்ததாக கூறப்படுகிற ஆக்கிரமிப்புகளை மாநில அரசு முறைப்படுத்தியது சரியல்ல. 7 லட்சத்து 24 ஆயிரத்து 897 சதுர மீட்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அரசு, சதுர மீட்டர் ஒன்றுக்கு தற்காலிக மதிப்பாக ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக குஜராத் அரசு விளக்கம் அளிக்கையில், அந்த நிறுவன திட்டம் உரிய காலத்தில் நிறைவேற்றப்படாததால் நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி இழப்பை சந்தித்தது என கூறியதை ஏற்க முடியாது.
போர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தை தாரை வார்த்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதில் மாநில அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவைதான் குற்றச்சாட்டுகள். இவற்றால் குஜராத் அரசுக்கு ரூ17,000 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: