ஞாயிறு, 9 டிசம்பர், 2012

விஸ்வரூபம் படத்தை டி.வி.யில் பார்க்க கட்டணம் ரூ1000!

Viruvirupu
விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் என்ற கமலின் திட்டத்தில், இந்த நிமிடம் வரை மாற்றம் ஏதுமில்லை. இந்தப் படத்தை முதலில் டி.டி.எச். மூலம் டி.வி.யில் வெளியிடுவதில் உறுதியாக உள்ளார் கமலஹாஸன்.
திரையரங்க உரிமையாளர்கள், “டி.டி.எச். மூலம் விஸ்வரூபம் படத்தை டி.வி.யில் ஒளிபரப்பும் புதிய முயற்சியை கமலஹாசன் கைவிட வேண்டும். இந்த முடிவை மேற்கொள்ளும் எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கிடையாது” என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கமல்ஹாசன் தன் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச். மூலம் திரையிடுவது பற்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. இதுபற்றி மதுரையில் இருந்த கமல்ஹாசனுடன், டெலி கான்பரன்சிங் மூலம் பல சந்தேகங்கள் கேட்டார்கள்.
அப்போது கமலஹாசன் கொடுத்த விளக்கம், “விஸ்வரூபம் படம் டி.டி.எச். முறையில், ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும். அப்படி திரையிடும்போது, திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒருநாள் முன்பு, இரவு 9 மணிக்கு மேல் திரையிடப்படும். ஒரு டி.டி.எச். கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ.1,000 வசூல் செய்யப்படும். இது, படத்துக்கு டிரைலர் போல் இருக்கும். இதை பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள்” என்றார்.
இருந்தாலும், ஒரு டி.டி.எச். கருவிக்கு ஒரு குடும்பம்தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது. ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளில் படத்தை காண்பித்து விட்டால், நாடு முழுவதும் பல கோடி பேர் படம் பார்த்து விடுவார்கள்.
எனவே கமலஹானை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து, இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம். அப்படி அவர் கைவிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசித்து முடிவு எடுப்போம். திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வை காண வேண்டும். எங்களை காப்பாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ‘‘திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக டி.டி.எச்.சில் கொடுக்கப்பட்ட எந்த படமாக இருந்தாலும், நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்ற தகவலை, சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஆகிய இருவரும் தெரிவித்தார்கள்.
இதன் அர்த்தம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கமலுக்கு ரெட் கார்டு போட்டிருக்கிறது.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கமலுக்கு ரெட், ஒயிட், எல்லோ என்று கலர் கலராக கார்டு போட்டு மிரட்டினாலும், டெக்னாலஜி டெவலப்மென்ட் விஷயத்தில் உடும்புப்பிடியாக இருக்கிறார் கமல். யாரோ ஒரு தரப்பு இறங்கி வரவேண்டியிருக்கும்!

கருத்துகள் இல்லை: