திங்கள், 10 டிசம்பர், 2012

கொலை, கொள்ளை அரங்கேற வசதியாக சிறைகள்

தமிழக சிறைகளில் உள்ள குற்றவாளிகள், வெளியில் உள்ள ரவுடிகளுடன், சர்வ சாதாரணமாக மொபைலில் பேசி, கொலை, கொள்ளை திட்டங்களை வகுப்பதே,குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.தமிழகத்தில் சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொலை செய்யப்படுவது, தொடர் கதையாக உள்ளது. இக்கொலைகள் குறித்து விசாரித்த, காவல் துறையினருக்கு அதிர்ச்சி கரமான தகவல்கள் கிடைத்துள்ளன. பெரும்பாலானக் கொலைகளில், சிறையில் உள்ள குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதும், அவர்கள் கைபேசி மூலம், வெளியில் உள்ள ரவுடிகளை, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுத்துவதும் தெரிய வந்துள்ளது.
சிறையில் கொலை திட்டம்:  http://www.dinamalar.com/

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் கவுன்சிலர் குமரன், கடந்த அக்., மாதம் முதல் தேதி, கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளியான வைரவன், கொலை திட்டத்தை வகுத்துவிட்டு, வேறு ஒரு வழக்கில், தாமாக நீதிமன்றத்தில் சரணடைந்து, வேலூர் சிறைக்கு சென்றுள்ளார். அதன்பின் சிறையிலிருந்தபடி, தனது ஆட்கள் மூலம் கொலை திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

பொன்விளைந்தகளத்தூர் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில், பிரபு என்பவர் சிறையிலிருந்தபடி, கொலை செய்ய ஆட்களை அனுப்பி உள்ளார். அதேபோல், மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் கொலை உட்பட பல்வேறு வழக்கில், முக்கியக் குற்றவாளிகள், சிறையிலிருந்தபடி கொலை செய்ய ஆட்களை அனுப்பி உள்ளனர். அவர்கள் கொலையாளிகளிடம், மொபைலில் பேசிய விவரங்களை, காவல் துறையினர்சேகரித்து உள்ளனர்.

கைபேசி தாராளமாக புழக்கம்:

அதேபோல் காஞ்சிபுரத்தை சேர்ந்த, பிரபல சாராய வியாபாரியும், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவருமான ஸ்ரீதர், இரண்டு மாதங்களுக்கு முன், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.அதன் பின் குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலிருந்து மொபைல் மூலம் பேசி, சிலரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். அவரது ஆட்கள் சென்று, பணம் பெற்று வந்து உள்ளனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த முக்கியப் பிரமுகரிடம், அவர் தொடர்ந்து பேசி வருவதை, காவல் துறையினர் கண்டறிந்து உள்ளனர். நேற்று முன்தினம் செங்குன்றத்தில், காஞ்சிபுரத்தை சேர்ந்த தேவராஜ், காவலர்கள் முன்னிலையில் கொலை செய்யப்பட்டார். இவரது அண்ணன் சீனு கொலை செய்யப்பட்ட வழக்கில், ஸ்ரீதர் முக்கியக் குற்றவாளி.அண்ணனை கொலை செய்த ஸ்ரீதரை, கொலை செய்ய, திருச்சி சிறையிலிருந்த தேவராஜ் திட்டமிட்டுள்ளார். இதுதொடர் பாக அங்கிருந்த காக்குவீரன் என்பவரிடம், அவர் பேசியுள்ளார். அதன்பின், ஸ்ரீதர் ஆட்கள் தேவராஜை, கொலை செய்ததாக கூறப்படுகிறது.இதுபோல், முக்கியக் குற்றவாளிகள் எல்லாம், சிறையிலிருந்தபடி மொபைலில் பேசி வருவது, சகல வசதிகளுடன் சிறையில் இருப்பது, காவல் துறையினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, காவல்துறை உயர்அதிகாரிகள் கூறியதாவது:பெரும்பாலான குற்றவாளிகளின், மொபைல் தகவல்களை சேகரித்தபோது, அவர்களுடன் சிறையிலிருக்கும் குற்ற

வாளிகள் பேசுவது தெரிய வந்தது. சிறையி லிருந்தபடியே கொலைக்கான திட்டத்தை வகுக்கின்றனர். சிறைத்துறை அலுவலர்கள் பணம் பெற்றுக்கொண்டு, கைதிகளுக்கு தேவையானவற்றை வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் கிளை சிறையில், அடிதடி வழக்கில் தொடர்புடையவர்களை சேர்க்க மறுக்கின்றனர். கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவரை, தாங்களாக முன்வந்து ஏற்றுக் கொள்கின்றனர். அவருக்கு தேவையான, அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்,என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.கலந்துரையாடும் கைதிகள்: வேலூர் சிறையில் உள்ள முக்கியக் குற்றவாளிகள், தங்களுக்கு தேவையானவற்றை, அங்குள்ள கேண்டீனில் வாங்கிக் கொள்கின்றனர். அங்குள்ள சிறு குற்றவாளி களுக்கு, தாராளமாக செலவு செய்கின்றனர். அவர்கள் விசுவாசியாக மாறுகின்றனர். பின்பு, அவர்களை குற்ற செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.

குற்றவாளிகள் அனைவரும் கலந்துரையாடும்போது, குற்ற செயல்களில் ஈடுபடுவது எப்படி, எனத் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். வெளியில் வந்த பிறகு, ஒருவருக்கொருவர், சிறையில் உதவுகின்றனர்.இதுபோன்ற நிலை, அனைத்து சிறைகளிலும் உள்ளது. சிறைத் துறையில், கைதிகளிடம் கைபேசி புழங்குவதை தடுக்க வேண்டும். முக்கியக் குற்றவாளிகள் கலந்துரையாடுவதையும், குற்றவாளிகளுடன், சிறைத் துறை அலுவலர்கள் கொஞ்சி குலாவுவதையும் தடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்களை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: