புதன், 26 செப்டம்பர், 2012

திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி தர முன்வந்த பிரதமர்- நிராகரித்தார் கலைஞர்

 Dmk Turns Down Pm S Offer Berths Union Cabinet சென்னை: மத்திய அமைச்சரவையில் 2 கேபினட் அமைச்சர் பதவி அல்லது சில இணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக பிரதமர் மன்மோகன் சிங் முன்வந்ததாகவும், ஆனால் அதை திமுக தலைவர் கலைஞர்  நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்து பெரிய கட்சி திரினமூல் காங்கிரஸ்தான். அக்கட்சிக்கு 19 எம்.பிக்கள் உள்ளனர். அடுத்த பெரிய கட்சியாக இருப்பது திமுக, அதற்கு 18 எம்.பிக்கள் உள்ளனர். தற்போது திரினமூல் காங்கிரஸ் வெளியே போய் விட்டதால், திமுகவுக்கு முக்கியத்துவம் கூடியுள்ளது.
திரினமூ்ல் விலகியுள்ளதாலும், மேலும் பல முக்கியப் பொறுப்புகளுக்கு இன்னும் அமைச்சர்கள் அறிவிக்கப்படாமல் இருப்பதாலும் மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதையடுத்து திமுகவுக்கான திட்டத்துடன் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை பிரதமர் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
அவரும் சென்னை வந்து சிஐடி காலனியில் உள்ள கருணாநிதியின் வீட்டில் வைத்து அவரைச் சந்தித்தார். அப்போது பிரதமரின் ஆபர் குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மத்திய அமைச்சரவையில் 2 கேபினட் அமைச்சர் பதவி அல்லது சில இணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக பிரதமர் கூறியுள்ளதை நாராயணசாமி தெரிவித்தாராம். ஆனால் இதை  கலைஞர் நிராகரித்து விட்டாராம்.

இப்போதைக்கு மத்திய அமைச்சரவையில் புதிதாக திமுக பிரதிநிதிகளை சேர்ப்பது குறித்து தான் யோசிக்கவில்லை என்று நாராயணசாமியிடம் தெரிவித்து விட்டாராம் கருணாநிதி. இதையடுத்து கருணாநிதியின் பதிலோடு டெல்லிக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் நாராயணசாமி.
இதுகுறித்து திமுக தரப்பில் ஒரு முக்கியத் தலைவர் கூறுகையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முக்கிய துறை ஒன்றைப் பெறலாம் என்று மூத்த திமுக எம்.பிக்கள் கருதி வந்தனர். ஆனால் கலைஞரின் எண்ணம் வேறாக இருக்கிறது. மத்திய ஆட்சி நிலையாக தொடர வேண்டும் என்பதே அவரது இப்போதைய ஒரே எண்ணம், அமைச்சர் பதவியை அவர் முக்கியமாக கருதவில்லை என்றார்.
இன்னொரு தலைவர் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலுமே திமுக, காங்கிரஸுடன் உறவை நீடித்து வருவதற்கு எதிர்ப்பு உள்ளது. காங்கிரஸிடமிருந்து திமுக விலக வேண்டும், தொடர்புகளைப் படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
கருணாநிதி தற்போது ஏன் அமைச்சரவையில் சேரவில்லை என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசுக்கு எதிராக மக்கள் கடும் கொந்தளிப்பான மன நிலையில் உள்ளனர். குறிப்பாக டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு ஆகியவை மக்களை பெரும் துயரத்தில் மூழ்கடித்துள்ளது. அதிலும் கேஸ் சிலிண்டருக்கான கட்டுப்பாடால், நாடு முழுவதும் பெண்கள் அனைவருமே காங்கிரஸ் அரசுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்களைச் சேர்ப்பது சரியாக இருக்காது என்று கருதுவதால்தான் கருணாநிதி அமைதியாக இருக்க முடிவெடுத்ததாக கூறுகிறார்கள்.
மேலும் காங்கிரஸ் கட்சி மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் குவிந்து வருகின்றன. இதுவும் கூட அமைச்சரவையில் சேர கருணாநிதி தயக்கம் காட்டுவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் வரை அமைதி காப்பது, அதன் பிறகு பாய்வது என்ற திட்டத்துடன் கருணாநிதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது திமுகவுக்கு 3 கேபினட் அமைச்சர் பதவியும், 4 இணை அமைச்சர் பதவிகளும் தரப்பட்டன. கேபினட் அமைச்சர்களாக மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராசா ஆகியோர் பொறுப்பேற்றனர். இணை அமைச்சர்களாக பழனிமாணிக்கம், காந்திசெல்வன், ஜெகத்ரட்சகன், நெப்போலியன் ஆகியோர் பதவியேற்றனர்.
இதில் ஸ்பெக்ட்ரம் ஊழல், ஏர்செல், மாக்சிஸ் விவகாரத்தில் அடிபட்டு தயாநிதி மாறனும், ராசாவும் பதவி விலகி விட்டனர். இந்த இரண்டு இடங்களுக்குத்தான் தற்போது புதிய பிரதிநிதிகளை அறிவிக்குமாறு பிரதமர் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: