செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சசிகலாவுக்கு ஆச்சார்யா கொடுத்த ‘மருந்து’ அட்டகாசமாக வேலை செய்தது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தோழி சசிகலா, நேற்று (திங்கட்கிழமை) பெங்களூரு கோர்ட்டில் ஆஜராவாரா என்ற கேள்விக்கு பதில் தெரிய பெங்களூரு கோர்ட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள்.
காரணம்,நேற்றைய விசாரணையில் சசிகலா ஆஜராகாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அவரது வழக்கறிஞரிடம் எச்சரிக்கை விடுத்திருந்தார் நீதிபதி மல்லிகார்ஜூனையா.
நீதிபதி மல்லிகார்ஜூனையா, அரசு வக்கீல் ஆச்சார்யா ஆகிய இருவரும் கொடுத்த ‘மருந்து’ காரணமாக, கோர்ட்டில் ஒழுங்காக ஆஜரானார். வழக்கத்தைவிட சற்று வேகமாக 87 கேள்விகளுக்கு பதில் கூறினார்.

பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை தாமதம் செய்வதற்காக சில தந்திரங்களை செய்து கொண்டிருந்த சசிகலா தரப்பு, வழக்கை தாமதிப்பதற்காக மேலும் சில காரியங்களை செய்ய தயாராக இருந்ததாக தெரிகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை தமக்கு வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களே வழக்கை தாமதம் செய்வதற்காக என்பது நீதிபதிக்கும், அரசு வக்கீலுக்கும் நன்றாகவே தெரியும். சனிக்கிழமை அந்த மனுக்களை டிஸ்மிஸ் செய்திருந்தார் நீதிபதி மல்லிகார்ஜூனையா.
அந்த மனுவில் ஜெயலலிதா, சசிகலா தரப்பு செய்திருந்த தந்திரம் என்ன தெரியுமா?
இருவருடைய மனுக்களும் தனித்தனியாக, இருவருடைய கையொப்பங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் அவற்றுக்கான அட்டஸேஷன் எதுவும் மனுவுடன் இணைக்கப் பட்டிருக்கவில்லை.
அதனால் மனுக்கள் டிஸ்மிஸ் ஆகும் என்பது முன்கூட்டியே அவர்களுக்கு தெரியும். கையொப்பம் இல்லை என்பதை காரணம் காட்டி மனுவை டிஸ்மிஸ் செய்திருந்தால், உடனே தாக்கல் செய்ய புதிய மனுக்கள், இருவருடைய கையொப்பங்களுடன் தயாராக இருந்ததாக தெரிகிறது.
புதிய மனுக்களை விசாரித்து தீர்ப்பளிக்க சில நாட்கள் எடுக்கும் என்று கணக்கு போட்டிருந்தார்களாம்.
ஆனால், மனுவை டிஸ்மிஸ் செய்த நீதிபதி, கூடவே கடுமையாக சில வார்த்தைகளையும் சேர்த்து மருந்து கொடுத்திருந்தார். “இந்த வழக்கின் விசாரணை நாளை (இன்று, திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை உங்கள் கட்சிக்காரர்களிடம் சொல்லுங்கள்” என்று வக்கீல்களிடம் தெரிவித்தார்.
அது போதாது என்று அரசு வக்கீல் ஆச்சார்யா, “சசிகலா மீதான ஜாமீன் உத்தரவை கேன்சல் செய்து, அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது” என்று செய்தியாளர்களிடம் தாமே தேடிச் சென்று கூறியிருந்தார். அது சசிகலா தரப்புக்கு போய்ச் சேரும் என்பது அவருக்கு தெரியும்.
இந்த காமென்ட் சசிகலா தரப்பை கிலி கொள்ள வைத்தது என்கிறார்கள். “திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜராவதுதான் நல்லது” என்று வக்கீல்களும் அட்வைஸ் கொடுத்தார்கள். அதையடுத்தே சசிகலாவின் பாதம் பெறும் பாக்கியத்தை இன்று பெங்களூரு தனிக் கோர்ட் வளாகம் பெற்றது.
காலை 11 மணிக்கு கோர்ட் தொடங்குவதற்கு முன்னரே வந்துவிட்டார் சசிகலா. மாலை 4.45 வரை, வழமையான திசை திருப்பல்கள் ஏதும் இல்லாமல், ஒழுங்காக 87 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
விசாரணை மீண்டும் அடுத்த மாதம் 2-ம் தேதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் சசிகலா அல்ல. மொழிபெயர்ப்பாளர் ஹரீஷ் 25-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை விடுமுறை கோரியிருந்தார். சசிகலாவின் வக்கீல் 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தார். அதனால்தான், மே 2-ம் தேதிக்கு அடுத்த வாய்தா வழங்கப்பட்டுள்ளது.
என்ன செய்வது? இடையிடையே நீதிமன்ற தரப்பில் இருந்து இப்படி சொட்டு மருந்து ஊற்றி விசாரணைக்கு வர வைக்க வேண்டியுள்ளது

கருத்துகள் இல்லை: