திங்கள், 23 ஏப்ரல், 2012

அழகிரி ஆதரவாளர் இசக்கிமுத்து திமுகவில்லிருந்து நீக்கம்

சென்னை: மதுரையில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது பங்கேற்காத மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது. முதல் நபராக, மதுரை மாநகர் மாவட்ட திமுக அவைத் தலைவர் இசக்கிமுத்துவை நீக்கியுள்ளனர்.
மனப்பால் குடிக்கும் மதோன்மத்தர்கள்
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை மாநகர் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை தலைமைக்கழகம் அனுப்பி வைத்தபோதும், அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்கனவே தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி நடைபெறவிருந்த மதுரை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டபோதும், மதுரை மாநகர கழக நிர்வாகிகள் சிலர் அவற்றிலே கலந்துகொள்ளவில்லை என்பதை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தனர்.

அதைப்பற்றி விவரம் கேட்டு அந்த நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில், தலைமைக் கழக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்குள்ளாக தி.மு.கழகத்தை ஏதேதோ காரணங்கள் சொல்லி அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கின்ற சில மதோன்மத்தர்களும், அவர்களுக்குத் துணையாக வெளியிடப்படுகின்ற ஏடுகளும் கற்பனைச் செய்திகளை வெளியிடுவதன் மூலம் தி.மு.கழகத்தில் பெரும் குழப்பம் இருப்பதை போல பாவனை செய்திருப்பதைக் கண்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
தலைமைக் கழகத்தின் சார்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் தேர்வுக்காக மதுரை சென்றபோதும், அங்கு தலைமைக்கழகம் அறிவித்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதும், மதுரை மாநகரக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம் என்று விளக்கம் கேட்டு அதற்கான கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதங்களை சிலர் மதிக்கவில்லை என்பதுடன் ஓரிருவர் "எங்களை விவரம் கேட்கவோ விளக்கம் கேட்கவோ தலைமைக்கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சட்டப்படி உரிமை இல்லை'' என்பதைப் போன்று தெரிவித்து, அதையே தங்களுடைய விளக்கமாக அனுப்பியிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் க.இசக்கிமுத்து எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். அவர் தலைமைக் கழகத்தை மதிக்காமல் இவ்வாறு எழுதியிருப்பது கழகத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.

எனவே மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் க.இசக்கிமுத்து கழகத்தின் சாதாரண உறுப்பினர் உள்பட எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதோடு, அடுத்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் போதும், அவர் உறுப்பினராகச் சேர்ந்திட தகுதியற்றவர் என்று தலைமைக்கழகம் அறிவிக்கின்றது. அவரை தவிர்த்து மற்றவர்களிடம் கேட்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கு அவர்கள் அனுப்புகின்ற விளக்கத்தைப் பொறுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த இசக்கிமுத்து தான் மதுரையில் ஸ்டாலின் பொதுக் கூட்டத்தை நடத்த போலீஸ் அனுமதி வாங்கியவர். ஆனால், அவரே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தலைமையின் உத்தரவால் போலீஸ் அனுமதியை வாங்கிய அவர் அழகிரியின் உத்தரவால் கூட்டத்தை புறக்கணித்தார். இந் நிலையில் அவரை தலைமை நீக்கியுள்ளது.

இதெல்லாம் சர்வ சாதாரணம்-அழகிரி:

இது குறித்து அழகிரி கூறுகையில், அதிமுகவில் தினமும் ஒருவரை கட்சியிலிருந்து நீக்கம் செய்கிறார்கள். அது தொடர்பாக கருத்து கேட்டு செய்தி வெளியிடுகிறீர்களா? திமுகவில் மட்டும் நீக்கம் செய்தால் இதற்குமேல் இந்த விஷயத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை: