திங்கள், 23 ஏப்ரல், 2012

தன்னைக் கொன்றவர்களை ராமஜெயமே வந்து சொன்னால்தான் உண்டு?

Ramajayam murder
திருச்சி: ராமஜெயத்தைக் கொன்றது யார் என்பது பெரிய மர்மமாக மாறியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில் சின்னத் துப்பு கூட கிடைக்காமல் தட்டுத் தடுமாறி வருகிறதாம் திருச்சி போலீஸ். இதையடுத்து கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பிதான் ராமஜெயம். இவர் கடந்த மார்ச் 29ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை நடந்து முடிந்து ஒரு மாதத்தை நெருங்கப் போகிறது. ஆனால் இதுவரை கொலைக்கான காரணமோ அல்லது கொலையாளிகள் யார் என்ற விவரமோ தெரியவில்லை. பெரும் மர்மாக உள்ளது.ரியல் எஸ்டேட்காரர்களால் கொலை செய்யப்பட்டார் என்று முதலில் தகவல்கள் வந்தன. அரசியல் பழிவாங்கல் என்று இன்னொரு செய்தி கூறியது. பெண் விவகாரம் காரணமாக கொலையானதாக ஒரு செய்தி வெளியானது. இப்படி அடுத்தடுத்து ஏகப்பட்ட கதைகள் வந்தனே தவிர கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

7 தனிப்படைகளை அமைத்து திருச்சி போலீஸார் பல கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பலரைப் பிடித்தும் விசாரித்துப் பார்த்தனர். தூத்துக்குடி மாநகராட்சி பெண் கவுன்சிலர் ஒருவரைக் கூட பிடித்து விசாரித்தனர். சில முக்கிய ரவுடிகளையும் ஒரு ரவுண்டு விசாரித்து முடித்து விட்டனர். இன்னும் துப்பு கிடைத்தபாடில்லை

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை. கொலையான ராமஜெயமே நேரில் வந்து இன்னார்தான் என்னைக் கொன்றது என்று தெரிவித்தால்தான் உண்டு என்ற அளவுக்கு போலீஸாரைப் பார்த்து எல்லோரும் கேலி பேச ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில், தற்போது இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: