செவ்வாய், 3 ஜனவரி, 2012

M.R.Radha.. ஏய் குருக்கள்… அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?”

 கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமைத்தமிழையும், ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகபடுத்தியது திராவிட இயக்கம்.
தமிழ்நாட்டைப் பிடித்து ஆட்டியது ஒரு பூதம். சுயமரியாதை இயக்கம் என்னும் பூதம்.
1925 ல் தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம், காங்கிரஸ், நீதிக்கட்சி என்று பல இடங்களில் ஊடுறுவியது. அதுகாறும் அவர்கள் நம்பிக்கொண்டிருந்த புனிதமாக நினைத்துக்கொண்டிருந்தவைகளை தலைகீழாக கவிழ்த்து நொறுக்கியது. அதற்கு ஆதரவாக எதிராக ஏதோ ஒரு நிலை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அப்படித்தான் அது நாடக கலைஞர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்தான் நடிகவேள் எம்.ஆர். ராதா.
தந்தை பெரியார் அரசியல் மேடைகளில் எப்படி சமரசம் இல்லாமல் போர்க்குணத்தோடு இயங்கினாரோ, அதுபோல் நாடக மேடைகளில் பெரியாரைபோலவே ஒரு ஒற்றை போர்வாளாக இயங்கினார் நடிகவேள். இப்படித்தான் திராவிட இயக்கம்  கலைத்துறையில் கால்பதித்தது.

ஆனால், சினிமாவில் பெரியாரோ பெரியாரின் தீவிர தொண்டர்களோ பங்கு கொள்ளவில்லை. நடிகவேளே கூட ஒரு படைப்பாளனாக தன் பங்களிப்பை சினிமாவில் செய்யவில்லை. நடிகனாகத்தான் அதுவும் நீண்டநாட்கள் கழித்துதான் பங்கெடுத்தார். அதை தன் ‘ரிடையர்டு லைப்’ என்றுதான் சொன்னார். சினிமாவில் பங்கெடுக்க கூடாது என்பதல்ல பெரியாரின் எண்ணம். ‘முடியாது’ என்பதுதான்.
தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பை சினமாவில் செய்ய முடியாது என்பதுதான் காரணம். ஆனால், திமுக காரர்கள் சினிமாவில் பங்கெடுத்தார்கள். அதற்குக் காரணம் பெரியாரின் கொள்கையில் இருந்து விலகி அவர்கள் செய்து கொண்ட சமரசம்தான்.
அவர்கள் பெரியாரிடம் இருந்து விலகி பிற்போக்காளராக மாறினாலும், சினிமா அவர்களைவிடவும் பிற்போக்காக இருந்தது. அதனால் அவர்கள் சினிமாவில் முற்போக்காளர்களாக முன்னணி  பாத்திரம் வகித்தனர்.
அதனால்தான், பராசக்தியில் “கோயில் கூடாது என்பதல்ல…. அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது….” என்று வசனம் வந்தது. இதை பெரியார் சொல்லமுடியாது. திமுகவால் தான் சொல்ல முடியும்.
ஏய் குருக்கள்அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று பார்ப்பனரை பார்த்து கேட்க மறுத்து, “ஏய் பூசாரி அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்என்று பார்ப்பனரல்லாதவரை பார்த்து கேள்வி கேட்டது.
இன்று காஞ்சிபுரத்தில், குருக்கள் என்ன பண்றானோ? அதைத்தான் பாரசக்தியில் அந்த பூசாரி பண்ணுவான். பூசாரிக்கு பதில் பார்ப்பன குருக்கள் காதாபாத்திரத்தை காட்டி பூணூலோடு கோர்ட்டு கூண்டுல நிறுத்தி இருந்தால் பராசக்தி ரிலீசே ஆகியிருக்காது.
பார்ப்பனியத்தை எதிர்த்து மேடையில், தனி பத்திரிகையில் ஆயிரம் எழுதலாம். ஆனால், பார்ப்பனர்கள் செல்வாக்காக இருக்கிற அதிகார மையத்தில் குறிப்பால்கூட எதிர்ப்பை காட்ட முடியாது.
ஆனாலும், திமுக காரர்களின் சினிமா பிரவேசம், ஆரோக்கியமான மாற்றத்தை தான் உருவாக்கிச்சு.  ‘ப்ரணநாதா, ஸ்வாமி’ என்ற பார்ப்பனவசனத்தை ஒழிச்சி, தனித்தமிழ் வசனங்களை கொண்டு வந்தது. ‘ராமாயணம், மகாபாரதம்’ போன்ற புராண குப்பைகளை தீர்த்துக்கட்டி சமூக படங்களை கொண்டு வந்தது.
திமுக வருகைக்கு முன் தமிழ்சினிமாவில், ஓரே ஒரு கதாபாத்திரம் கூட இஸ்லாமிய காதாபாத்திரம் கிடையாது. ராமாயணத்திலும், மகாபாரத்திலும் எப்படி முஸ்லீமை காட்ட முடியும்? திமுக கலைஞர்கள் உருவாக்கிய அலை தமிழ்சினிமாவின் உள்ளடக்கத்தை தலைகீழ் மாற்றியது.
அதற்கு முன் ஒரு முஸ்லீம் கதாபாத்திரம்கூட இல்லாமல் வந்த தமிழ்சினிமாவில், ஒரு இந்துகூட இல்லாத முமுமையான இஸ்லாமிய சூழலில் சினிமாக்களை கொண்டுவர திமுக  ஏற்படுத்திய அலை முழு காரணமாக இருந்தது.
குலேபகாவலி, அலிபாபவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன் என்று முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வர ஆரம்பித்தன. திமுக அல்லாத இயக்குநர்கள் கூட இப்படித்தான் படம் எடுக்க ஆரம்பித்தார்கள். குலேபகாவலியின் இயக்குநர் டி.ஆர். ராமண்ணா. இவர் திமுக காரர் அல்ல. இப்படி ஒரு Trend திமுக காரகள்தான் உருவாக்கினார்கள்.
பீம்சிங்கின் பாவமன்னிப்பில் இஸ்லாமியராக வரும் நாகையாதான் மிகவும் நல்லவர். இந்த உலகத்திலேயே மிகவும் நல்லவர் போல்தான் வருவார். அவர் ஒரு இந்து குழந்தையை எடுத்து நல்ல மனிதனாக வளர்ப்பார். கிறிஸ்துவராக வரும் சுப்பையா அவரும் ரொம்ப நல்லவர். அந்தப் படத்துல வில்லன் ஒரு இந்து. அதுவும் அந்த வில்லன் எல்லா வில்லத்தனங்களையும் இந்து அடையாத்தோடுதான் செய்வார்….எங்கப்பனே ஞானபண்டிதா…..என்ற குரலோடு….
நடிகவேள்தான் அந்த வில்லன். சொல்லவும் வேணுமோ?
கிறித்துவராக வரும் சுப்பையா, அநாதை பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பார். அதன் மூலம் மக்களிடம் அவருக்கு கிடைக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாத… ஆளவந்தார் என்கிற இந்து (எம்.ஆர்.ராதா)  “இதுனால நாட்டுக்கு என்ன புண்ணியம்? நான்கூடதான் போனவாரம் ஒரு கல்யாணம் பண்ணிவைச்சேன். அரசமரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் அதுல இல்லாத புண்ணியமா?” என்பார்.
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வந்த ‘அடுக்குமல்லி’ திரைப்படத்தில் கூட ஒரு முஸ்லீம், இறந்துபோன தன் இந்து நண்பனின் குடும்பத்தை காப்பாற்றுவார்.
ரஜனிகாந்த் நடித்த படிக்காதவன் படத்தில் கூட முஸ்லிமாக வரும் நாகேஷ்தான் அநாதையான குழந்தைகளை வளர்த்திருப்பார். இப்படி தமிழர்களில் ஒரு பகுதியான இஸ்லாமியர்ளை நல்லவர்களாக காட்ட வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது….. இதை மாற்றிய படம் மணிரத்தினமும் பாலசந்தரும் இணைந்து எடுத்த ரோஜா.
இந்தப் படம் அதுகாரும் தமிழ்சினிமாவில் இருந்த இஸ்லாமிய ஆதரவு என்கிற நிலையை தலைகீழாக மாற்றியது. இந்தப் படத்தின் ‘சிறப்பு மோசடி’  இசை.
வழக்கமாக வில்லனுக்கான பின்னணி இசை ஒரு அச்சமூட்டுகிற ஒலி….அல்லது திகிலூட்டுகிற இசை… என்றுதான் இருக்கும். ஆனால் இந்தப் படம்தான் முதல் முறையாக…இஸ்லாமிய இசையை, பாங்கு ஒலியை வில்லனுக்கான பின்னணியாக மாற்றியது. இஸ்லாமிய இறைவழிபாட்டு முறைகூட வில்லத்தனமான அடையாளமாக மாற்றியது.
இதற்காகவே அந்த படத்தின் இசைக்காக தேசியவிருதும் வழங்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் வழியாக ஆஸ்கார் விருதுவரை ஏ.ஆர். ரகுமானை அழைத்தும் சென்றது.
ரோஜா இப்படி இஸ்லாமிய எதிர்ப்பு அடையாளங்களோடு எடுப்பதற்கு, காஷ்மீர் பிரச்சினையும் பாகிஸ்தான் உளவாளிகளும் என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் பிரிவினையின்போதோ, பாகிஸ்தானோடு போர் நடந்தபோதோ கூட இஸ்லாமியர்களை வில்லனாக சித்தரித்து தமிழ்படங்கள் வரவில்லை.
-தொடரும்

கருத்துகள் இல்லை: