செவ்வாய், 3 ஜனவரி, 2012

பெண் டாக்டர் படுகொலை: கோவில்பட்டியில் அரசு டாக்டர்கள் திடீர் ஸ்டிரைக்

கோவில்பட்டி: தூத்துக்குடியில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இன்று திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் கைக்குழந்தைகளுடன் சிகிச்சை பெற வந்த பெண்கள் ஆவேசமடைந்து வளாகத்திலுள்ள அரசு தலைமை டாக்டர் வீட்டை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை டாக்டர் சேதுலட்சுமி நேற்றிரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யக் கோரியும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் டாக்டர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் கைக் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி ஆகிய நோய்களுக்கு சிகி்ச்சை பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். அவர்கள் டாக்டர் சிகிச்சை அளிக்க மறுத்ததால் ஆவேசமடைந்தனர்.

அரசு மருத்துவமனை உள்ளேயே டாக்டர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தலைமை டாக்டர் ருக்மணி வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுபோல் கோவில்பட்டி இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு டாக்டர் சாந்தகுமார் தலைமையில் 13 டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது

கருத்துகள் இல்லை: