வியாழன், 5 ஜனவரி, 2012

Afghanistan விபச்சாரத்திற்கு ஒத்துழைக்காத புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்




காபூல்: விபச்சாரத்திற்கு இணங்க மறுத்த 15 வயது புதுமணப் பெண்ணை கடந்த 5 மாதங்களாக கழிவறைக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படு்ததிய அவரது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சாஹர் குல்(15). அவருக்கும் பக்லான் மாகாணத்தைச் சேர்ந்த குலாம் சாகி(30) என்னும் ராணுவ வீரருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமணப் பெண்ணை குலாம் வீட்டார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க நினைத்தனர். இதனால் குல்லை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவர்கள் குல்லை சிகரட்டால் சுட்டும், உருட்டுக் கட்டையால் அடித்தும், கை நகங்களைப் பிய்த்தும், முடியைப் பிடித்து இழுத்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். குல்லை வீட்டின் கீழ்தளத்தில் உள்ள கழிவறையில் கடந்த 5 மாதங்களாக அடைத்து வைத்து அவருக்கு போதிய உணவு கூட கொடுக்காமல் பாடாய் படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த பக்லான் மாகாண போலீசார் வீட்டின் கதவை உடைத்து குல்லை காப்பாற்றினர். உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த குல்லை காபூலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மீட்கப்பட்டு 6 நாட்களாகியும் குல்லின் ஒரு கண் வீங்கி மூடிக் கொண்டுள்ளது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவரது கணவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி்த் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: