புதன், 4 ஜனவரி, 2012

நீர்மட்டம் குறைக்க கேரளா விடுத்த கோரிக்கை நிராகரிப்பு


புதுடெல்லி : முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உயர் அதிகார குழு நிராகரித்துவிட்டது.
முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசியல்வாதிகள் புரளி கிளப்பி வருகின்றனர். எந்த நேரத்திலும் அணை உடைந்து லட்சக்கணக்கானவர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக வதந்தி பரப்பினார்கள். இது தமிழகம், கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார குழு ஆய்வு நடத்தி வந்தது. அந்த குழுவிடம், நில அதிர்வால் அணைக்கு ஆபத்து. அதனால், புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும். முதல்கட்டமாக அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளா முறையிட்டது. இதையடுத்து, 2 நிபுணர்களை கொண்ட குழு முல்லை பெரியாறு அணையைப் பார்வையிட்டது.

நிபுணர் குழு தனது அறிக்கையை  உயர் அதிகார குழுவிடம் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. அதில், நில அதிர்வுகளால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது. இந்த அறிக்கையை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான  உயர் அதிகார குழு நேற்று பரிசீலித்தது. மேலும், அணையின் பாதுகாப்பு தொடர்பான வேறு சில ஆய்வு அறிக்கைகளையும் குழு ஆராய்ந்தது.

நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை  உயர் அதிகார குழு நேற்று நிராகரித்துவிட்டது. இது பற்றி குழுவின் உறுப்பினரான நீதிபதி கே.டி.தாமஸ் கூறுகையில்,ÔÔஅணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை குழு நிராகரித்துவிட்டது. இப்போதுள்ளது போல் அதிகபட்ச நீர் மட்டம் 136 அடியாக பராமரிக்கப்பட வேண்டும்ÕÕ என்று குழு உத்தரவிட்டுள்ளது. உயர் அதிகார குழுவின் இந்த உத்தரவு கேரள அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.

இதற்கிடையே,  உயர் அதிகார குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளது. அறிக்கையை இறுதி செய்வதற்காக வரும் 24, 25ம் தேதிகளில் குழுவின் கூட்டம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: