வெள்ளி, 22 செப்டம்பர், 2023

கனடாவில் சீக்கியர் கொலை விவகாரத்தை ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் எழுப்பினார்

 tamilmurasu.com.sg  : வாஷிங்டன்: கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று கனடா கூறுவது பற்றி புதுடெல்லி ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பைடனும் இதர தலைவர்களும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கவலை தெரிவித்ததாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் வியாழக்கிழமை குறிப்பிட்டது.
வேவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் ‘ஐந்து கண்கள்’ என்ற ஒரு கட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்று இருக்கின்றன.
அந்த நாடுகளின் பல நாட்டுத் தலைவர்களும் பிரதமர் மோடியிடம் அந்த விவகாரத்தை எழுப்பியதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் கூறியது.

ஜி20 மாநாட்டில் இடம்பெற்ற அந்த விவகாரம் பற்றி தகவல் அறிந்த மூன்று பேரை மேற்கோள்காட்டி அந்தத் செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.

இதன் தொடர்பில் உடனடியாக வெள்ளை மாளிகை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.
சீக்கிய பிரிவினைவாதத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஜூன் மாதம் கொல்லப்பட்டார்.

கனடா நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சீக்கிய பிரிவினைவாதியின் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.
இந்தியாவில் ஜி20 மாநாடு நடந்து முடிந்ததற்குச் சில நாள்கள் கழித்து கனடா பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த விவகாரத்தை நேரடியாக மோடியிடம் எழுப்பும்படி ஜி20 மாநாட்டில் கூடிய தலைவர்களை கனடா பிரதமர் கேட்டுக்கொண்டதாகவும் ஃபைனான்ஷியல் டைம்ஸ் தெரிவித்தது.

இதனிடையே, அந்தக் கொலை தொடர்பிலான கனடாவின் புகார்களை அடுத்து இந்திய உயர்நிலை அதிகாரிகளுடன் அமெரிக்கா தொடர்புகொண்டு வருவதாக வியாழக்கிழமை அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு சிறப்பான விதிவிலக்கு எதையும் அமெரிக்கா அளிக்கவில்லை என்றாரவர்.

கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்த நெருக்கடி இந்தியா-கனடா உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது.
கனடா மக்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை இந்தியா வியாழக்கிழமை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்தியாவில் செயல்படும் தூதரக அரசதந்திர அதிகாரிகளைக் குறைத்துக்கொள்ளும்படியும் கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.

மேற்கத்திய நாடுகளின் நீண்டகால தோழமை நாடாக கனடா இருந்து வருகிறது. அதேவேளையில், இந்தியாவுடன் வலுவான உறவை ஏற்படுத்திக்கொள்ள இப்போது மேற்கு நாடுகள் விரும்புகின்றன.

இதனால் மேற்கு நாடுகளுக்குச் சங்கடமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, நியூயார்க்கில் ஐநா பொதுப் பேரவைக் கூட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர், தான் ஏற்கெனவே தெரிவித்தவற்றை மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதி ஒருவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியாவுக்கு பங்கு இருக்கிறது என்று நம்புவதற்கு உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்று அவர் மீண்டும் தெரிவித்தார்.

இந்நிலையில், கனடாவின் ரெஸ்சான் ஏரேசாஸ் என்ற நிறுவனத்தில் இந்தியாவின் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கொண்டிருந்த 10 விழுக்காட்டு பாத்தியதையை முடித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ரெஸ்சான் ஏரேசாஸ் நிறுவனம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடக் கொண்டுள்ள முதலீட்டு ஒப்பந்ததை முறித்துக்கொள்ள விரும்புவதாக அறிவித்தது.

கருத்துகள் இல்லை: